Pages

Tuesday, September 14, 2010

(செல்போன்) நினைவுகள்

என்னவளின் Nokia 6300, என் Sony Ericsson K750i மொபைல்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்...


அன்று :

மொபைல் போன் அப்பொழுது தான் பிரபலம் அடைய ஆரம்பித்திருந்தது. எங்கள் ஹாஸ்டலில் மொத்தம் நான்கு பேர் தான் மொபைல் வைத்து இருந்தனர். எங்கள் கேங்கில் குமாரிடம் மட்டும் இருந்தது வீட்டிற்கு மிகவும் செல்லப் பிள்ளை என்பதால். Nokia 1100 மாடல். அவனது பந்தாவிற்கு குறைவே இருக்காது. "ஜீவா, நம்ம ஹாஸ்டல்ல எங்கயுமே டவர் கிடைக்க மாட்டேங்குது டா. என்ன பண்ணலாம்" என்றான் குமார். "டேய் அதுக்கு பேரு டவர் இல்ல, சிக்னல் டா.. படிச்ச பையன் தான நீ' என்று கிண்டல் அடித்தேன். "நாம எப்ப டா போன் வாங்குவோம்?" என்று என்னிடம் கேட்டான் பிரேம். 'நான் என்னோட போனை பத்தி ஒரே ஒரு கனவு வச்சு இருக்கேன் டா. என்னோட முதல் மாச சம்பளத்துல தான் வாங்க வேண்டும்னு. எல்லாருகிட்டயும் Nokia தான் இருக்கு அதுனால நான் அது வாங்க மாட்டேன். வேற ஏதாச்சும் பிராண்ட் தான் வாங்குவேன். நினைச்ச நேரம் அம்மா அப்பாகிட்ட பேசத் தான போன், அதனால சிம்பிள் ஆக இருந்தா போதும் டா. நம்ம குமார் மாதிரி பந்தா பண்றதும் எனக்கு பிடிக்காது' என்றேன். "பார்க்கத் தான்டா போறேன் நீ புதுசா மொபைல் வாங்கினதும் என்னல்லாம் சீன் போடுறன்னு" என்றான் குமார். நல்லா படிச்சு சீக்கிரமா வேலைக்கு போகணும். முதல் மாதம் சம்பளம் வந்த உடனே மொபைல் வாங்க வேண்டும் என்றும் முடிவு எடுத்தேன்.

இன்று :

எல்லோரும் கடைசி செமஸ்டரில் ஐந்து பேப்பர் எழுத நான் மட்டும் நன்றாகப் படித்ததால் ஐந்து பிளஸ் ஏழு பன்னிரண்டு பேப்பர் எழுத வேண்டி எனக்கு விண்ணப்பம் வந்திருந்தது. கல்லூரி முடிந்து மூன்று மாதம் கழித்து தான் எனக்கு HCLல் வேலை கிடைத்தது. நண்பர்கள் அனைவருக்கும் மெயில் பண்ண மட்டுமே முடிந்தது. எப்ப வேலையில் சேருவோம், எப்ப முதல் மாதம் சம்பளம் வரும், வந்ததும் எப்ப மொபைல் வாங்குவோம் என்ற ஆவலில் காக்க ஆரம்பித்தேன் அக்டோபர் 21க்காக. அக்டோபர் மாதம் முடிந்தும் எனக்கு சம்பளம் வரவில்லை பதினைந்தாம் தேதிக்கு பின்னால் சேர்ந்ததால். மேலும் ஒரு மாதம் காக்க வேண்டி இருந்தது. 'உனக்கு மட்டும் ஏன் இந்த கொடுமை ஜீவா!!!'

டிசம்பர் 7, 2006. 'வைஷ்ணவி, நீ தான் மொபைல் செலக்ட் பண்ணித் தரனும் இன்னைக்கு. ஒரே ஒரு கண்டிஷன் Nokia தவிர வேற எந்த மாடல்னாலும் செலக்ட் பண்ணித் தா ' என்று அவளை கடைக்கு அழைத்துச் சென்றேன். எல்லா மாடல்களும் எனக்கு காண்பிக்கப்பட்டது. ஒவ்வொரு மாடலிலும் ஏதோ ஒரு குறை சொல்லிக் கொண்டே இருந்தேன் இது பார்க்க நல்லா இல்லை, இது ரொம்ப விலை ரொம்ப அதிகமா இருக்கு, இதுல கேமரா இல்லை, மியூசிக் பிளேயர் இல்லை, ரெண்டுமே இருக்கணும், கலர் நல்லா இல்லை என்று. நான்கு மணி நேர போராட்டத்திற்குப் பின் "Sony Ericsson K750i" வாங்குவது என்று முடிவு செய்தோம். "டேய், உங்கிட்ட பொண்ணுங்க தோத்துப் போய்டுவாங்க, இனிமேல் என்னைக்காது நான் தான் ஷாப்பிங் பண்ண ரொம்ப டைம் ஆக்குறேன்னு சொல்லு அப்புறம் தான் டா உனக்கு இருக்கு கச்சேரி" என்றாள். மொபைல் வாங்கியதும் சிம் போட்டு நான் செய்த முதல் கால், அனுப்பிய முதல் எஸ்எம்எஸ், கொடுத்த முதல் missed கால் எல்லாமே அவளுக்குத் தான். அதே போல எனக்கு வந்த முதல் கால், முதல் missed கால், முதல் மெசேஜ், நான் எடுத்த முதல் போட்டோ, வீடியோ எல்லாம் அவளுடையது தான்... மொபைலை தரையில் கூட வைக்காமல் பார்த்துக் கொண்டேன். என் நண்பர்கள் அனைவரும் கிண்டல் செய்தனர் நான் மொபைலை பாதுகாக்கும் விதத்தைப் பார்த்து. 'உங்களுக்கெல்லாம் என் மொபைலை பார்த்து பொறாமை' என்று தான் அனைவரிடமும் சொல்லுவேன். எனக்குப் பிடித்த பாடல்கள், போட்டோக்கள் என்று நிறைய சேர்த்து வைத்தேன். யாரு கண்ணும் பட்டுவிடக் கூடாது என்று திருஷ்டி கூட கழிப்பேன். ஒரு நாள் தவறுதலாக நண்பன் ஒருவன் மொபைலை கீழே போட்டு விட பாத்ரூமில் போய் அழுதது தனிக் கதை.

அன்று :

எங்கள் கிளாஸ் படிப்பாளிகள் இரண்டு பேர், சென்னை Anna University இல் "Paper Presentation" இல் கலந்து கொண்டு முதல் பரிசு வாங்கி இருந்தனர். கிளாஸ் முடிந்ததும் எங்கள் அனைவரையும் கேன்டீன் வரச் சொன்னார்கள் அவ்விருவரும். அவர்கள் இருவரைத் தவிர எங்கள் கிளாஸில் மிச்சம் இருக்கும் 61 பேரும் வெளுத்து வாங்கினோம். 'அண்ணா, சப்பாத்தி ஒரு ப்ளேட்' என்று கேட்க, அவரோ,"சார் நீங்க நாலாவதா வாங்கிட்டுப் போனீங்களே அதோட சப்பாத்தி ஓவர் ஆயிடுச்சு" என்று அவமானப் படுத்தி விட்டார். நான் சாப்பிட்டுக் கொண்டே ப்ரேமிடம் கேட்டேன், 'மச்சான் இதுக்கெல்லாமா ட்ரீட் தருவாங்க' என்று. 'எதுக்கு தந்தா என்ன டா நமக்கு? அடுத்த ப்ளேட் என்ன சொல்லலாம்னு யோசி" என்றான். 'நம்ம கேன்டீன்ல எந்த ஜூஸ் விலை ரொம்ப அதிகமோ அதை இன்னைக்கு குடிச்சிடனும் டா' என்றேன்.

இன்று :

போன் வாங்கியதற்கு என் நண்பர்கள் அனைவருக்கும் ட்ரீட் கொடுத்தேன். என் மொபைலில் போட்டோஸ் எடுத்துக் கொண்டோம். "மச்சி போன் ரொம்ப சூப்பரா இருக்கு டா" என்று பாலு சொல்ல, 'நல்லா சாப்பிடு மச்சி' என்று இரண்டு லெக் பீஸ்களை எடுத்து வைத்தேன் அவனுக்கு. ப்ரேம், "மச்சி சிக்கன், மட்டன் போர் அடிச்சுப் போயிடுச்சு. prawn தான் இந்த ரெஸ்டாரன்ட்ல ரொம்ப காஸ்ட்லி, இன்னைக்கு நாம சாப்பிடுறதுல prawn நமக்கு வெறுத்தே போயிடனும்' என்று செந்திலிடம் மெதுவாகச் சொன்னது என் காதில் விழாமல் இல்லை. செந்திலும் உடனே "prawnல என்னன்ன இருக்கோ அது எல்லாத்துலயும் ஒரு ப்ளேட்" என்று ஆர்டர் கொடுத்தான் "prawn சாப்பிட்டு பாரு டா ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்" என்று என்னிடம் கூறிக் கொண்டே.

அன்று :

"ஜீவா மொபைல வச்சு என்ன டா பண்ணிட்டு இருக்க?" கேட்டான் குமார். 'snake கேம் விளையாடிட்டு இருக்கேன் டா' என்றேன். 'கேம் விளையாடாத டா, பேட்டரி நிக்குறது இல்ல. நிறையா சாப்ட்வேர் ப்ராப்ளம் வேற வருமாம். அப்பா ஆசையா வாங்கி கொடுத்த போன் மச்சி, ஏதாச்சும் பிரச்சினை வந்திடுச்சுன்னா நான் ரொம்ப பீல் பண்ணுவேன்" என்றான். 'சாரி டா' என்றேன். 'அப்படி என்ன பீலிங்க்ஸ்?' என்று மனதுக்குள் திட்டிக் கொண்டேன். பின்னொரு நாள் 'குமார், உன் மொபைல் தர்றியா என் ஸ்கூல் ப்ரெண்டுக்கு மெசேஜ் அனுப்பிட்டு தர்றேன்' என்றேன். "ஜீவா மெசேஜ் ஒன்னுக்கு 50 பைசா டா, அதனால 4 மெசேஜ் மட்டும் அனுப்பிக்கோ. சரியா?" என்றான். 'சரிடா. தேங்க்ஸ்' என்றேன். என் பள்ளித் தோழனுடன் பேச வேண்டியதை எல்லாம் 4 மெசேஜ்களில் பேச வேண்டிய கட்டாயம். முதல் முறை டைப் பண்ணும் போது மெசேஜ் சைஸ் அளவுக்கு அதிகமாக இருந்தது. மூன்று மெசேஜ்களாக டைப் அடித்து இருந்தேன். இப்படியே போனா 12 மெசேஜ் ஆயிடுமே என்று கஷ்டப்பட்டு தேவை இல்லாத வார்த்தைகளை எடுத்துவிட்டு வார்த்தைகளை சுருக்கி விட்டு ஒரு மெசேஜ் ஆக மாற்றினேன். எப்படியோ நான் அவனிடம் சொல்ல வேண்டியதை எல்லாம் நான்கு மெசேஜ்களில் சொல்லி முடித்தேன். 'தேங்க்ஸ் குமார்' என்று மொபைலை அவனிடம் கொடுத்தேன். மொபைலை வாங்கியவன் balance செக் பண்ணியது என் மனதை மிகவும் கஷ்டப்படுத்தியது. 'மச்சான், நான் வேணா நான் அனுப்புற மெசேஜ்க்கு காசு தந்திடவா?' என்று நூறாவது முறையாக கேட்டேன் என்றேன். "நீயா, எப்ப டா நல்லவனா மாறின? இந்த மொபைலுக்கு டாப் அப் போட்ட பணத்தை சேர்த்து வச்சு இருந்தா எங்க அப்பா அடுத்த செமஸ்டர் பீஸ் கட்டி இருப்பாரு டா" என்றான்.

இன்று :

ஏப்ரல் 27 2009. வைஷ்ணவிக்கு முப்பத்தி நான்காவது முறையாக கால் செய்து முடித்தேன். சுவிட்ச் ஆப் செய்யப் பட்டு இருக்கிறது என்ற பதிலே திரும்பத் திரும்ப கிடைத்தது. அவளுக்கு மெயில் அனுப்பினேன் 'எங்க இருக்க? மொபைலுக்கு என்ன ஆச்சு?' என்று. அவளிடம் இருந்து எந்த பதிலும் வரலை. ஆபீஸில் எந்த வேலையும் ஓடவில்லை. இரவு 7 மணிக்கு அவள் வீட்டு நம்பரில் இருந்து போன் வந்தது. 'வைஷு லூசு எருமை பண்ணி எங்கடி போய் தொலைஞ்ச, மொபைல்ல ஏன் ஆப் பண்ணி வைச்ச? எப்படி பதறிப் போயிட்டேன் தெரியுமா?' என்றேன். அவள் பதில் ஏதும் பேசவில்லை. 'பேசுடி' என்றேன். "ஜீவா, என்னோட போன்.. " அவளுடைய குரல் தடுமாறியது. 'என்ன டி ஆச்சு போனுக்கு?' என்றேன். "போன் தொலைஞ்சிடுச்சு. எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் ரொம்ப ஆசையா வாங்கின மொபைல் தெரியுமா? நீயே பார்த்து இருக்குல்ல புதுசு மாதிரியே வச்சு இருப்பேன். Nokia 6300 மாடல். அந்த மொபைல் எனக்கு ரொம்ப பிடிக்க இன்னொரு காரணம் உங்கிட்ட என்னோட காதலை சொன்னது அந்த போன்ல தான். இன்னைக்கு ஆபீஸ் போகப் பிடிக்கலை. ஒரே அழுகையா வந்தது அதான் வீட்லயே இருந்துட்டேன்" சிறு குழந்தையைப் போல அழ ஆரம்பித்தாள். 'இங்க பாருடி செல்லம், என் கண்ணுல்ல, இப்ப அழக் கூடாது. உன் நிலைமை புரியுதுமா. உன்னோட போன் உன்கிட்டே திரும்ப வந்திடும் பாரு' என்று ஆறுதல் படுத்த முயற்சித்தேன். பதில் இல்லை அவளிடம் இருந்து. 'சரி இதுக்கு பேரு தான் ரூம் போட்டு அழுறதா?' என்றேன். சிரித்தாள்.

மறுநாள், 'புது மொபைல் வாங்கிற ஐடியாவே இல்லையா?' என்றேன். "வேற மொபைல் வாங்க இஷ்டமே இல்லை ஜீவா. என்ன தான் புது மொபைல் வாங்கினாலும் என்னோட அந்த மொபைல் மாதிரி வராது" என்றாள். 'உன் கூட நான் எப்படி பேசுறது? வா இன்னைக்கு கடைக்குப் போகலாம். உன்னோட பழைய மொபைல் மாதிரி இல்லைன்னாலும் நான் வாங்கித் தர்றதுனால கொஞ்சம் ஸ்பெஸலா இருக்கும்' என்றேன். "சாரி ஜீவா, அம்மா இன்னைக்கு நைட் வரும் போது மொபைல் வாங்கிட்டு வர்றேன்னு சொல்லிருக்காங்க. Latest 3G மாடல் பார்த்து வச்சு இருக்கிறதா சொன்னாங்க" என்றாள். எனக்கு கோபம் வந்தது இருந்தாலும் அம்மா தானே வாங்கித் தருகிறார்கள் என்று பொறுத்துக் கொண்டேன். அவளை கடைக்கு கூட்டிட்டு போய் அவளுக்கு பிடித்த மாதிரி ஒரு மொபைல் வாங்கித் தர வேண்டும் என்று நான் கட்டி வைத்து இருந்த கனவுக் கோட்டை இடிந்ததை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 'ஹ்ம்ம் சரிடி. மொபைல் வந்ததும் எனக்கு தான் முதல்ல கால் பண்ணனும்' என்றேன்.

அன்று :

மதியம் 12.30 மணி. 'அம்மா பசிக்குது. அம்மா பசிக்குது சீக்கிரம் சாப்பாடு கொண்டு வா மா' என்று கத்திக் கொண்டே இருந்தேன். "டேய் ஏன்டா இப்படி கத்தி மானத்தை வாங்குற? என்னால நிம்மதியா டிவி பார்க்க முடியல. இப்படி கத்துறதுக்கு பதிலா ஒவ்வொரு வீடா போய் அம்மா பசிக்குது, அம்மா பசிக்குது ன்னு பாட்டு பாடு சீக்கிரம் உனக்கு சோறாவது கிடைக்கும்" என்றாள் என் தங்கை ஜோ . சமையலறையில் இருந்து அம்மா "என்னடி உனக்கு அவனை பார்த்தா கிண்டலா போச்சா? என் பிள்ளை பசி தாங்க மாட்டான்டி. கொஞ்சம் பொறுத்துக்கோ கண்ணு" என்றாள் என் அம்மா.

இன்று :

நைட் ரூமில் சாப்பிட ஆரம்பித்தோம். 'நைட் பத்து மணிக்கு கால் பண்றேன்னு சொன்னேனே! இன்னும் 2 நிமிஷம் தான இருக்கு'. எவ்வளவு வேகமாக சாப்பிட முடியுமோ அவ்வளவு வேகமாக சாப்பிட்டு முடித்து போனை எடுத்தேன் . "மச்சி இந்த உலகத்துலேயே போனை வச்சு உயிர் வாழுறவன் நம்ம ஜீவா மட்டும் தான் டா" என்று கமெண்ட் அடித்தான். 'நீயும் இப்படி அவசர அவசரமா சாப்பிட நாள் சீக்கிரம் வரும் டா' என்று கூறிக் கொண்டே மாடிக்கு ஓடினேன். "சாப்பிட்டு முடிச்சாச்சா?" என்றாள் வைஷ்ணவி. 'சாப்பிட்டேன்' என்றேன். "இன்னைக்கும் அவசர அவசரமா சாப்பிட்டியா? போய் நல்லா சாப்பிட்டு வா. அப்ப தான் நான் பேசுவேன்" என்று கோபித்துக் கொண்டாள். 'வைஷு, 'orkutல "Five things you can't live without" என்று ஒரு கேள்வி இருக்கும் தெரியுமா? அதுக்கு என்னோட பதில் போன்ல உன்கூட பேசாம இருக்கிறது' ன்னு தான் இருக்கும் என்றேன். சிரித்தாள்.

சில நாட்களுக்குப் பிறகு, 'டேய் KFC ல இருந்து எப்படா சிக்கன் வாங்கிட்டு வந்தீங்க? எப்ப முடிச்சீங்க?' என்றேன் ப்ரேமிடமும் பாலுவிடமும். "இல்ல மச்சி, உன்னைக் கூப்பிடலாம்னு தோனுச்சு, அப்புறம் உனக்கு சிக்கனா போனா ன்னு கேட்டா நீ என்ன பதில் சொல்லுவன்னு யோசிச்சுப் பார்த்தோம். உன் பதில் கண்டிப்பா சிக்கன் வேண்டாம் ன்னு தான் இருக்கும் அதான் கூப்பிடலை" என்றான் பாலு. அவன் சொல்வது நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மை தான். என் உலகமே அந்த மொபைல் போன் தான் என்று மாறிப் போனது.

அன்று :

ராகம் தியேட்டர். சிவகாசி படம் பார்க்க நண்பர்களுடன் சென்று இருந்தேன். பிரேமும் அருளும் வர நேரம் ஆகி விட்டது. 'டேய் படம் ஆரம்பிச்சு 5 நிமிஷம் ஆயிடுச்சு. 'இப்படி லேட்டா தான் வருவீங்கன்னா அடுத்து உங்களுக்கு டிக்கெட் எடுக்க மாட்டேன், நீங்களே எடுத்துட்டு வந்துக்கோங்க' என்றேன். "சாரி மச்சி சாப்பிட்டு வர கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. நீ இரண்டாவது தடவை தான டா பார்க்கிற. அப்புறம் என்ன?" என்றான் அருள். 'எப்ப பாரு சாப்பிடுறதுலையே இருங்க டா' என்றேன். "டேய் ஜீவா தயவு செய்து நீ மட்டும் சாப்பாட பத்தி பேசாத" என்றான் சங்கர்.

இன்று :

PVR cinemas. அவதார் முதல் நாள் முதல் ஷோ. நண்பர்களுடன் சென்று இருந்தேன். படம் பார்ப்பதை விட வைஷ்ணவியிடம் பேசுவது தான் எனக்கு பிடித்து இருந்தது. அவளிடம் பேசிக் கொண்டு இருந்தேன். இன்டர்வலில் என் நண்பர்ள் பட்டாளமே வெளியே வந்தது. என்னைப் பார்த்த அருள் "டேய் இவனும் நம்மளோட படம் பார்க்க வந்து இருந்தானா?" என்று தெரியாத மாதிரி கேட்டான் மற்ற நண்பர்களிடம். "டேய் அடுத்த பாதியாது வருவியா?" என்று சங்கர் கேட்க 'வாங்க டா உள்ள போகலாம்' என்று அவர்களுடன் இரண்டாவது பாதி பார்க்க ஆரம்பித்தேன். 'இந்த கொசுங்க தொல்லை தாங்க முடியலை. சொல்லுடி' என்று அவளுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி என் அடுத்த பாதியை தொடர்ந்தேன்.

அன்று :

நானும் என் நண்பர்கள் நாலு பேரும் டிவி பார்த்துக் கொண்டிருந்தோம். இந்தியா vs பாகிஸ்தான் டெஸ்ட் மேட்ச் லைவ். அருள் வந்து "டேய் நாளைக்கு செமஸ்டர் டா. ஜீவா உனக்கு Thermodynamics அரியர் பேப்பர் வேற மதியம் இருக்கு, படிக்கலையா?" என்றான். 'இந்தா கிளம்பிடுவோம் மச்சி. டிராவிட் 120 ரன் ல இருக்கான். 200 அடிச்சதும் படிக்க ஆரம்பிச்சிடுவோம்' என்றேன். "டேய் டெஸ்ட் மேட்ச் தான.. Hightlights பார்த்துக்கோங்க டா" என்றான். 'இல்லை மச்சி, லைவ்வா பார்க்கிற அந்த பீல் கிடைக்காது. நீ போய் படி, அப்ப தான் எங்களுக்கு சொல்லித் தர முடியும்' என்று சொல்லிவிட்டு நாங்கள் அனைவரும் மேட்சை தொடர்ந்தோம்.

இன்று :

சென்னை சூப்பர் கிங்க்ஸ் க்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் க்கும் 20-20 மேட்ச் நடந்து கொண்டிருந்தது. முரளி விஜய் வெளுத்துக் கொண்டிருந்தான். என்னவளிடம் இருந்து கால் வந்தது. போனை எடுத்தேன். அருள் "டேய் மேட்ச் பார்க்கலை?" என்று கேட்டான். 'Hightlights பார்த்துக்கிறேன் மச்சி' என்றேன். "டேய் புல் மேட்ச்சும் Hightlights மாதிரி தான்டா இருக்கு" என்று கிண்டல் அடித்தான். 'சொல்லு டி' என்றேன். "மேட்ச் பார்க்கலையா? உனக்கு பிடிச்ச டீமாச்சே" என்றாள். 'உன்கூட பேசுறதை விட வேற எதுவும் முக்கியம் இல்லடி. ஒன்னு சொல்லட்டுமா வைஷு, இந்த போன்லயே உன்கூட குடும்பம் நடத்தனும்னு சொன்னா கூட நான் ஒத்துக்குவேன் டி' என்றேன். "என்கூட பேசுறதுல அப்படி என்ன டா இருக்கு?" என்றாள். எனக்கு அதற்கு மட்டும் பதில் தெரியவில்லை.

அன்று :

ஜூன் 1, 2006. நேற்றோடு எங்கள் கல்லூரி முடிந்து விட்டது. உடனே கிளம்ப மனம் இல்லாமல் நண்பர்கள் அனைவரும், கூட ஒரு நாள் ஹாஸ்டலில் தங்கிவிட்டு கிளம்பத் தயாரானோம். ஒவ்வொருத்தரிடமும் அவர்களுடைய போன் நம்பரை வாங்கினேன். ஒவ்வொருத்தராக கிளம்ப கிளம்ப எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அழ ஆரம்பித்து விட்டேன். யாரெல்லாம் அழ மாட்டார்கள் என்று நான் கணித்து வைத்து இருந்தேனோ அவர்களும் சிறு குழந்தை போல கண் கலங்க ஆரம்பித்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என் நெருங்கிய நண்பர்களும் கிளம்ப நான் கதற ஆரம்பித்து விட்டேன். என் நான்கு வருட ரூம்மேட் ராஜா என்னிடம் வந்து "டேய் அழாத டா. அப்புறம் நானும் அழ ஆரம்பிச்சிடுவேன். நாம பிரிஞ்சு போல டா. கண்டிப்பா அடிக்கடி ஒவ்வொருத்தரை பார்த்துக்குவோம். சென்னைலயோ இல்ல பெங்களுர்லயோ தான் இருக்கப் போறோம் எல்லோருமே. மறுபடியும் நாம ரூம்மேட்ஸ் தான் டா" என்றான். என்னிடம் அவன் சமாதானம் செய்தாலும் அவன் கண்களில் நீர் இருக்கத் தான் செய்தது. கல்லூரி நாட்கள் திரும்ப கிடைக்கப் போறது இல்லையே. நினைவுகள் மட்டும் தான் இருக்கும். புது உலகம், நிறைய பொறுப்புகள். எப்படி எதிர்கொள்ளப் போகிறேன்??

இன்று :

மார்ச் 11,2010.

"ஜீவா நீ என்னை மறந்திடு. எனக்கு பிடிச்ச மொபைல் போனும் என்கிட்ட இருந்து போயிடுச்சு. இப்ப என் வாழ்கையும். புதுசா ஒரு மொபைல் வாங்கித் தந்த மாதிரி என்னோட வாழ்க்கையையும் முடிவு பண்றது என்னோட அம்மா தான். என்னால அவங்கள எதிர்த்து ஏதும் பண்ண முடியலை"

'நான் இல்லாம உன்னால வாழ்ந்திட முடியுமா வைஷு? மொபைல் போனை தொலைச்சிட்டு அவ்வளவு கஷ்டப்பட்ட இப்ப என்னையும் தொலைச்சிட்டு எப்படி இருப்ப?'

"தெரியலை. இதை எல்லாம் பார்க்கக் கூடாதுன்னு தான் என் மொபைல் அப்பவே தொலைஞ்சு போயிடுச்சுன்னு நினைக்கிறேன். அதுவும் நல்லதுக்கு தான். இதே மாதிரி நடக்கிற எல்லாமே நல்லதுக்கு தான் ஜீவா. காலம் எல்லாத்துக்கும் பதில் சொல்லும். கொஞ்ச காலம் போச்சுன்னா உன்னோட மனசு மாறும். உன் நல் மனசுக்கு என்னைய விட ஒரு நல்ல பொண்ணு உனக்கு கிடைப்பா ஜீவா.." அழ ஆரம்பித்தாள்.

அந்த நிமிடம் எனக்கு செத்துப் போய் விட வேண்டும் என்று மட்டுமே தோன்றியது. என்ன செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை அப்பொழுது. என்னுடைய காதலைப் போலவே என் போனும் உடைந்து போய் தரையில் கிடந்தது. அழுது கொண்டே உடைந்து போன பாகங்களை பொறுக்க ஆரம்பித்தேன்.

April 27, 2010. வடபழனி Univercell ஷோ ரூம்.

"சார் அந்த ரேட்டுக்கு இந்த மாடல் நீங்க வாங்கிக்கலாம். புது மாடல். நீங்க கேட்குற மாடல் இப்ப production ஸ்டாப் பண்ணிட்டாங்க. இது பார்க்கிறீங்களா?" என்றார் சேல்ஸ்மேன்.

'எனக்கு அந்த மாடல் தான் வேணும். கிடைக்குமா கிடைக்காதா அண்ணா?' என்றேன்.

"நைட் 7 மணிக்கு வர்றீங்களா சார். எங்களோட இன்னொரு ஷோ ரூம்ல ஒரு பீஸ் இருக்காம். பையன் போய் எடுத்திட்டு வரணும்" என்றார்.

இரவு 7.34 மணி. 'உனக்கு தெரியுமா வைஷு.. நான் என் காலேஜ் டேஸ்ல எவ்வளவு சந்தோசமா இருந்தேனோ அதை விட சந்தோசத்தையும் அன்பையும் உணர்ந்தேன் நீ என்னை காதலிக் ஆரம்பிச்ச பிறகு. ஆனால் இப்ப உன்னோட காதலுக்குப் பதிலா உன் நினைவுகள் மட்டும் தான் என்கிட்ட இருக்கு. உன்னோட நினைவுகள் என்னைக்குமே குறையப் போறது இல்லை வைஷ்ணவி. இப்ப வாங்கி இருக்கிற இந்த போனும் உன்னை ஞாபகப் படுத்திட்டே இருக்கும். நீ தொலைச்ச போன் எங்கயும் போகல. என்கிட்ட தான் இருக்குன்னு நினைச்சுக்கோ வைஷ்ணவி. என்னோட காலேஜ் ப்ரெண்ட்ஸ் வெறும் நினைவுகளா மட்டும் தான் இருக்கப் போறாங்களோன்னு பயந்தேன் ஆனால் என்னை விட்டு பிரியாத மாதிரி எனக்கு வரம் கிடைச்சது. அதே மாதிரி காலம் முழுவதும் நீ என்னோட இருக்கிற வரம் கிடைக்குமா?' என்று புதிதாய் வாங்கிய Nokia 6300ல் இருந்து இப்பொழுது உபயோகத்தில் இல்லாத வைஷுவின் நம்பருக்கு கால் செய்து பேசிக் கொண்டிருந்தேன்..

1 comments:

Unknown said...

"புதிதாய் வாங்கிய Nokia 6300ல் இருந்து இப்பொழுது உபயோகத்தில் இல்லாத வைஷுவின் நம்பருக்கு கால் செய்து பேசிக் கொண்டிருந்தேன்"

-- கண்ல கண்ணீர் வருது...

Post a Comment