Pages

Monday, October 28, 2013

கனவுகளைக் காதலிக்கிறேன் - 6

“வித்யா நீ போய் சாப்பிடு” என்றேன்.

‘நீ எங்க டா போற?’ என்றாள் வித்யா.

“எனக்கு இங்க சாப்பிட பிடிக்கல அதனால வீட்டுக்குப் போறேன்”

‘அதான் இன்னைக்கு அவளே சாப்பிட கூப்பிட்டாள்ல அவளோட போய் இருக்க வேண்டி தான?’

“நான் வருவேன்னு தெரிஞ்சும் நேத்து ஏன் அவ என்ன விட்டுட்டுப் போனா. அதை நினைச்சாலே ஏதோ ஒரு கோபம் வருது அவ மேல. என் நட்புக்கு இவ்வளவு தான் மதிப்பா???? இதெல்லாம் உனக்குப் புரியாது.. விடு வித்யா”

‘கோபத்தை குறைச்சுக்கோடா. நீ கோபப்படுறதா இருந்தா முதல்ல எங்கிட்ட தான் கோபப்படனும். நேத்து நிலா லேப் வெளிய தான் உனக்காக காத்துக்கிட்டு இருந்தா. நீ அப்ப தான் உள்ள போய் இருந்த அதனால நான் தான் நீ வர லேட் ஆகும்னு அவளை போகச் சொன்னேன்’

“நீ சொன்னா அவ போயிடுவாளா????”

‘எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு நான் தான் உங்க சண்டைக்கு காரணம்னு. நான் வேணா அவகிட்ட பேசிப் பார்க்கிறேன் டா’

“ஒன்னும் வேணாம். எங்களை சேர்த்து வைக்கிறேன்னு நீ ஏதும் பண்ண நான் உன்கிட்டயும் பேச மாட்டேன்.. அப்புறம் உன் இஷ்டம்” சொல்லிவிட்டு கிளம்பத் தயாரான நேரத்தில் நிலாவும் வந்தால் சைக்கிள் ஸ்டாண்டிற்கு.

அவளும் தன் சைக்கிளை எடுத்தாள். என்னைப் புரிந்து கொண்டவளாய் வித்யா நான் கேட்க நினைத்ததை நிலாவிடம் கேட்டாள் எங்க டி போற என்று. நிலா ‘வீட்டுக்குப் போய் சாப்பிடப் போறேன்’ பதில் சொல்லிவிட்டு புறப்பட்டுச் சென்றாள்.

வித்யா நான் என்ன சொல்ல போகிறேன் என்று என்னையே பார்த்தாள். நான் பதில் எதும் சொல்லாமல் தலை குனிந்து நின்றேன்.

‘எப்படி இப்படி ஒரு ஃப்ரெண்ட்ட உன்னால பேசாம இருக்க முடியுது???? நேத்து கூட என்ன நடந்துச்சு என்று தெரியாம நீ தான் அவசரப்படுறியோன்னு தோனுது. அவள்ட்ட பேசு என்றாள்’ வித்யா.

அவள் சொல்வது எனக்கு புரிந்தாலும் என் ஈகோ என்னைத் தடுத்தது நிலாவிடம் பேச.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வேறு நெருங்கிக் கொண்டிருந்தது. எங்கள் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் எந்த க்ரூப் வேண்டும் என்று பொதுத் தேர்வுக்கு முன்னரே பதிவு செய்து கொள்ள வேண்டும். பத்தாம் வகுப்புத் தேர்வில் அந்த குரூப்பிற்கு தேவையான மதிப்பெண்கள் எடுத்தால் நாம் கேட்ட க்ரூப் கிடைத்துவிடும்.

அன்று க்ரூப் பதிவு செய்யும் நாள்,

நாங்கள் எல்லாரும் வரிசையில் நின்று கொண்டிருந்தோம். எனக்கு முன்னால் வித்யா நின்று கொண்டிருந்தாள். அந்நேரம் நிலா வர அவளை தனக்குப் பின்னால் நிறுத்தினாள் நாங்கள் ஏதும் பேசிக் கொள்வோம் என்று. நானும் நிலா என்னிடம் க்ரூப் பற்றி ஏதும் கேட்பாள் அப்படியே அவளிடம் பேசிவிடலாம் என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவள் வித்யாவிடம் மட்டும் பேசிக் கொண்டிருந்தாள். என்னை கண்டு கொள்ள கூட இல்லை. நானும் அவளிடம் ஏதும் கேட்கவில்லை. வித்யாவின் முறை வர அவள் முதல் க்ரூப் என்றாள். நிலா பதிவு செய்யும் முறை, அவள் என்னை திரும்பி ஒரு முறை பார்த்தாள். ஆனால், ஏதும் பேசவில்லை. அவளும் முதல் குரூப்பை பதிவு செய்து விட்டு வித்யா விடம் பேச ஆரம்பித்தாள் மீண்டும்.

இப்போது என்னுடைய முறை. பேசுவதை விட நான் என்ன க்ரூப் எடுக்கப் போகிறேன் என்பதிலேயே நிலாவின் கவனம் முழுதும் இருந்தது. கம்ப்யூட்டர் க்ரூப் வேணும் என்றேன். இதைக் கேட்டதும் நிலா ஏதும் பேசாமல் அவள் க்ளாஸிற்கு சென்று விட்டாள் வித்யாவிடம் கூட சொல்லாமல். வித்யா என்னை அசிங்கமாக திட்டாத குறை தான். அவளுக்கு தெரிந்த 'நாயே பேயே சனியனே' போன்ற வார்த்தைகளால் என்னை வறுத்து எடுத்தாள். ‘அவளை ரொம்ப கஷ்டப்படுத்துற நீ. எங்கிட்டயும் பேசாத போ டா’ என்று சொல்லிவிட்டு வித்யாவும் சென்று விட்டாள்.

அவர்கள் இருவரும் சென்றதும் பதிவு செய்து கொண்டு இருப்பவரிடம் ‘சார் நான் என்ன க்ரூப் சொன்னேன்?’ என்றேன். IInd க்ரூப் தம்பி என்றார். எனக்கு முதல் க்ரூப் தான் வேணும் என்றேன். தம்பி இனி மாத்த முடியாது என்று அவர் சொல்ல அவர் காலில் விழாத குறையாக எப்படியோ எனக்கு முதல் க்ரூப் என்று மாற்ற வைத்தேன்.

நாளை முதல் Study Holidays ஆரம்பிக்கப் போகிறது. நிலாவை அடுத்து பரீட்சை அன்று தான் பார்க்க முடியும். இன்று கிளம்புவதற்கு முன் அவளிடம் எப்படியாவது பேசிவிட வேண்டும் என்று முடிவெடுத்தேன். எங்கள் க்ளாஸ் சீக்கிரமே முடிந்ததால் நான் அவள் க்ளாஸ் முன் நின்று கொண்டிருந்தேன். அவளுக்காக காத்திருக்கிறது தெரிந்து விடக் கூடாது என்று அஷோக்கிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவள் க்ளாஸ் முடிந்தது. பேக் எடுத்துக் கொண்டு கிளம்பத் தயாரானாள்.

என்னை பார்த்தவள் உன்கிட்ட கொஞ்சம் தனிய பேசனும், வீட்டுக்கு போயிட்டே பேசலாமா என்றாள். நான் சரி என்று சொல்ல இருவரும் சைக்கிளை உருட்டிக் கொண்டே பேச ஆரம்பித்தோம்.

‘அன்னைக்கு ஏன் வேற க்ரூப் எடுத்த?’

“ஏதோ ஒரு கோபத்துல”

‘அப்புறம் எதுக்கு திரும்ப முதல் க்ரூப்னு மாத்துன?’

“உனக்கு எப்படி தெரியும்?”

‘உளவுத்துறைல இருந்து செய்தி வந்துச்சு. அப்படி என்னடா கோபம் என் மேல. நான் அப்படி என்ன தப்பு பண்ணேன்? அன்னைக்கு என்ன நடந்துச்சு தெரியுமா’

“அதைப் பத்தி பேசாத. நினைச்சா இன்னும் கோபம் வருது”

‘நீ இப்படி தான் சொல்லுவன்னு தெரியும் அதான் என் மனசுல இருக்கிறத இந்த லெட்டர்ல எழுதி இருக்கேன். வீட்டுல போய் படி. படிச்சப்புறம் என்னை நீ புரிஞ்சுப்பன்னு நினைக்கிறேன்’

“ஹ்ம்ம்”

‘நீ எங்கிட்ட பேசலைன்னா கண்டிப்பா என்னால பரீட்சை நல்லா எழுத முடியாது. அப்புறம் யார் நினைத்தாலும் ரெண்டு பேரும் ஒரே க்ரூப்ல படிக்க மாட்டோம். என் ஸ்கோர் குறைந்தால் கடைசி க்ரூப் தான் கிடைக்கும். நான் கஷ்டப்பட்டு படிக்கிறதை விட நீ பரீட்சை முன்னால சொல்ற ஆல் தி பெஸ்ட்ல என்னோட மார்க்ஸ் இருக்கு’

“நீ கண்டிப்பா நல்லா பண்ணுவ நான் ஆல் தி பெஸ்ட் சொல்லலைன்னாலும்”

‘ஏன்டா இப்படி என்னோட சண்டை போடுற. நான் என்ன சொன்னாலும் நீ இப்படி தான் இடும்புக்கு பேசுவ. அந்த லெட்டரை படி அதுக்கப்புறம் நீயே முடிவு பண்ணிக்கோ நம்ம நட்பு தொடரனுமா இல்லை வேண்டாமா என்று. பரீட்சை அன்னைக்கு உன்னை சந்திப்பேங்கிற நம்பிக்கைல இப்போ கிளம்புறேன்’ என்றாள்.

“என்ன இருக்கு அந்த லெட்டர்ல?”

‘உங்கிட்ட பல முறை என்ன நடந்துச்சுன்னு சொல்ல வந்தேன். நீ என்னை பேசவே விடலை. அதான் இப்ப லெட்டரா எழுதிட்டேன் நீயே படிச்சு தெரிஞ்சுக்கோ. பார்க்கலாம் ஆங்கிலப் பரீட்சை அன்னைக்கு உனக்கு என்னைப் பார்க்கனும் என்று இருந்தால்’

விடை பெற்றோம் இருவரும்.

வீட்டிற்கு வந்ததும் நிலா கொடுத்த லெட்டரைப் பிரித்து படிக்க ஆரம்பித்தேன்.


உறங்கச் செல்கிறேன்….

Friday, October 25, 2013

கனவுகளைக் காதலிக்கிறேன் - 5

எங்கள் நண்பர்கள் கூட்டத்தில் நிலாவைத் தவிர மற்ற அனைவரும் A செக்ஷன் நிலா மட்டும் B செக்ஷன். வேண்டும் என்றே யாரோ இப்படி செய்திருக்கிறார்கள் என்று எனக்கு தோன்றியது. தமிழ் சார் மேல் தான் சந்தேகம் வந்தது. அவருக்குத் தான் நானும் நிலாவும் நெருங்கிப் பழகுவது சுத்தமாக பிடிக்கவில்லை. எங்கள் இருவரின் பெற்றோரிடமும் அவர் எத்தனையோ முறை இதை பற்றி சொல்லிப் பார்த்தார் ஆனால் எங்கள் இருவரின் வீட்டிலும் இதை கண்டுகொள்ளாதலால் அவர் இப்படி செய்திருக்க வேண்டும்.

நிலாவை இடைவேளையில் சந்தித்தேன். அவள் அழுதிருந்ததை அவள் கண்கள் காட்டிக் கொடுத்தன. என்னைப் பார்த்ததும் கண்களை துடைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.

‘எதுக்கு டா என்னை மட்டும் வேற செக்ஷன்ல போட்டாங்க? இப்ப மாத்த முடியாதா?’

“காலைல ஹிஸ்டரி சாரட்ட பேசினேன். அவர் இனி மாத்துறது கஷ்டம்னு சொன்னாரு. தமிழ் சார் தான் இப்படி பண்ணதா சொன்னாரு” - ஹிஸ்டரி சார் ஒருவர் தான் மாணவர்களிடம் மிக நெருங்கிப் பழகுபவர். தமிழ் சார்க்கு எங்களை மட்டும் இல்லை ஹிஸ்டரி சாரையும் பிடிக்காது.

‘தமிழ் சாரை திட்டித் தீர்த்தாள். அம்மா அப்பாவை பேச வச்சு செக்ஷன் மாறப் போறேன்டா. இந்த செக்ஷன் எனக்குப் பிடிக்கவே இல்லை நீ நம்ம கேங் இல்லாம.’

நான் பதில் சொல்ல ஆரம்பிக்கும் முன் இடைவேளை முடிய லஞ்சில் மீட் பண்ணலாம் என்று சொல்லி விட்டு அவரவர் கிளாஸ்க்கு சென்றோம்.

எப்ப லன்ச் வரும் என்று இருந்தது. பாடம் கவனிக்கவே இல்லை. லன்ச் பெல் அடிக்க லன்ச் பாக்ஸை கூட எடுக்காமல் ஓடினேன் நிலாவைப் பார்க்க.

‘இன்னைக்கு அம்மா அப்பாக்கிட்ட பேசி நாளைக்கு அவங்கள கூட்டிட்டு வரலாம்னு இருக்கேன்’ என்றாள் நிலா.

“நிலா இந்த விசயத்தை நாம பெருசாக்க வேணாம்னு தோனுது. ஒரு வருடம் தான அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் நிலா”

‘உன்னால முடியுமா?’

“என்னால நிஜமா முடியல நீ இல்லாத கிளாஸ்ல உட்கார. ஆனால் இப்ப வேற வழி இல்ல. அவரால இந்த வருஷம் மட்டும் தான் நம்மள பிரிக்க முடியும். அடுத்த வருஷம் என்ன பண்ண முடியும்னு பார்க்கிறேன்”

‘என்னடா சொல்ற? அடுத்த வருஷமும் நம்மள பிரிச்சிட்டாருன்னா?’

“லூசு அடுத்த வருஷம் எப்படி நம்மள அவரால பிரிக்க முடியும். நாம ரெண்டு பெரும் ஒரே க்ரூப்ல எடுப்போம். நாம அடுத்த வருஷம் பதினொன்றாம் வகுப்பு போறோம். மறந்துட்டியா!!!!”

‘அட ஆமால்ல’ லேசாக சிரித்தாள் அவள் அழகான முன்பற்கள் தெரியும்படி.

“நாம ரெண்டு பெரும் இடைவேளையில் மீட் பண்ணப்  போறோம். ஒரே கிளாஸ்ல இருக்கிற மாதிரி கண்டிப்பா இருக்காது தான் ஆனாலும் இந்த சின்னப் பிரிவைத் தாங்கிக்கலாம். ரெண்டு பேரும் நல்லா படிச்சு ஒரே க்ரூப்ல சேரனும். அது தான் நம்ம அடுத்த குறிக்கோளா இருக்கனும்”

‘சரிடா. கண்டிப்பா ஒரே க்ரூப்பா தான் இருப்போம் நாம ரெண்டு பேரும். எந்த க்ரூப் டா சேரலாம்?’

“உனக்கு என்ன க்ரூப் பிடிக்கும்னு சொல்லு அதுல சேரலாம்”

‘எனக்குன்னு ஏதும் இல்லடா. நம்ம ஸ்கூல்ல ஃபர்ஸ்ட் க்ரூப் மேக்ஸ் பையாலஜி. ஆனால் எனக்கு கம்ப்யூட்டர் சைடுல போனும்னு தான் இருக்கு. இப்ப போய் வீட்ல கம்ப்யூட்டர் குரூப் எடுக்கப் போறேன்னு சொன்னா இந்த க்ரூப் வேணாம்னு சொல்லுவாங்க. மேக்ஸ் பையாலஜி எடுத்தாலும் ஸாஃப்ட்‌வேர் சைடு போக முடியும். அதனால ஃபர்ஸ்ட் க்ரூப் தான்டா எடுக்கனும்’

“சரி நிலா”

‘உனக்கு எந்த க்ரூப் டா பிடிக்கும். அத சொல்லு முதல்ல’

“நீ எந்த க்ரூப்ல இருக்கியோ அந்த க்ரூப் தான் எனக்கு பிடிக்கும்”

சிரித்தாள்.

இன்டர்வல் லன்ச் நேரங்களைத் தவிர பள்ளி முடிந்து சைக்கிளை மிதிக்காமல் உருட்டிக் கொண்டே பேசிக் கொண்டு மெதுவாக நடந்து செல்வதை வழக்கமாக வைத்து இருந்தோம்.

5 மாதங்கள் இப்படியே ஓடின.

ஒரு நாள்,

நான் கெமிஸ்ட்ரி லேபில் இருந்தேன். நிலா எனக்காக லன்ச்க்கு வெயிட் பண்ணிக் கொண்டிருந்தாள் வெளியில். அரையாண்டு செய்முறைத் தேர்வுகள் நடந்து கொண்டிருந்ததால் என்னால் வெளியில் வந்து அவளிடம் பேச முடியவில்லை. வேக வேகமாக டெஸ்ட்டை முடித்து ரிப்போர்ட்டை சமர்ப்பித்து விட்டு வெளியில் பார்த்தேன் நிலாவை காணவில்லை. லன்ச் ஹாலுக்கு சென்றேன்.

நிலா அவள் கிளாஸ் பையன் கௌதம் உடன் வெளியில் வந்து கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் ‘சரி நான் கிளம்புறேன் நிலா. கிளாஸ்ல பார்ப்போம்’ விடை பெற்றுச் சென்றான் கௌதம்.

‘என்னடா அதுக்குள்ள லேப் முடிச்சிட்டியா? நல்லா பண்ணியா இல்லையா?’ என்றாள் நிலா.

“அதை விடு. உனக்கு புது நண்பர்கள் கிடைச்சிட்டாங்க போல” என்றேன்.

‘நான் உனக்காக லேப்க்கு வெளியே காத்துக்கிட்டு இருந்தேன் டா. வித்யாவைப் பார்த்தேன். அவ நீ இப்ப தான் உள்ள போய் இருக்கன்னு சொன்னா. அதான் கௌதம் கூட….’

“நான் எப்படினாலும் வருவேன்னு உனக்கு தெரியாதா? ஏன் அவனோட போன?”

‘டேய் சொல்றது முதல்ல கேளு...’

“எல்லாமே புரிஞ்சுகிட்டேன் இப்ப.. நீ ஏதும் பேச வேணாம். என்ன தான் இருந்தாலும் நான் இப்ப வேற செக்ஷன் தான. உன் கிளாஸ் நண்பர்கள் மாதிரி வராதுல்ல”

‘சூர்யா நான் சொல்றத ஃபர்ஸ்ட் கேளு டா’

“ஒன்னும் வேணாம். கிளாஸ் போ நீ. நானும் கிளம்புறேன். Bye” என்றேன்.

அப்போது கூட ‘என் மேல இருக்கிற கோபத்தை சாப்பாடுல காட்டாத. சாப்பிட்டு கிளாஸ்க்கு போ’ என்றாள் நிலா.

“உன் நண்பர்கள் காத்துக்கிட்டு இருக்காங்க உனக்காக நீ கிளாஸ்க்கு கிளம்பலாம்” கோபமாக பேசிவிட்டு சென்றேன்.

அவள் ஏதும் பேசாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்கள் கலங்க ஆரம்பித்தன. எங்களுக்குள் வந்த முதல் சண்டை இது தான்.

அடுத்த நாள் லன்ச் டைம் நிலா என் வகுப்பிற்கு வெளியில் நின்று கொண்டிருந்தாள். ‘வாடா  லன்ச் போலாம்’ என்றாள். “நீ இனிமேல் கௌதம் கூட சாப்பிட்டுக்கோ. நமக்குள்ள இனி எதுவும் இல்ல. வா வித்யா லன்ச் போலாம்” சொல்லிவிட்டு வித்யாவுடன் சென்றேன்....


உறங்கச் செல்கிறேன்….

Friday, October 18, 2013

கனவுகளைக் காதலிக்கிறேன் - 4

எந்த பாட்டுக்கு ஆடலாம் சூர்யா?’ என்று வித்யா மீண்டும் கேட்க “வித்யா நாம இப்படி செய்தால் எப்படி?” என்றேன்.

‘எப்படி?’ என்றாள் நிலா.

‘அவன் எங்கிட்ட சொன்னான்’ என்றாள் வித்யா.

‘நாமன்னு நீ என்னையும் சேர்த்து தான சொன்ன?’ – நிலா.

“நீயும் தான் நிலா. நீ மட்டும் இல்லை கார்த்திக் அஷோக்கும் தான்” என்றேன்.

அப்படி என்ன திட்டம் என்று கார்த்திக்கும் அஷோக்கும் நுழைந்து கொண்டார்கள் இப்பொழுது.

“வித்யா, நிலா உங்களில் ஒருத்தர் கார்த்திக் கூட ஆடுங்க இன்னொருத்தர் அஷோக் கூட” என்றேன்.

‘ரெண்டு டீமையும் அனுப்புவாங்களா Interschool Competition க்கு?’ – வித்யா.

“அடிப்பாவி நாம பதிவு பண்ணா நம்மளை உடனே தேர்ந்தெடுத்ததிடுவாங்களா? நம்ம ஸ்கூல்ல இருந்து நிறைய டீம் பதிவு பண்ணிருப்பாங்க. முதலில் தகுதிச் சுற்று இருக்கும் பள்ளி அளவில்.  அதுல ஜெயிக்கிறவங்களை அனுப்புவாங்க’ என்றேன்.

‘ஓ அப்படியா!. சரி எனக்கு ஓகே. யாரு ஜெயிக்கிறாங்களோ எங்களுக்குள்ள அவங்க பெஸ்ட் டான்சர் என்று தெரிஞ்சிடும் நானா இல்ல நிலாவா என்று. அது போதும் எனக்கு’ என்றாள் வித்யா.

நான் வித்யா கூட ஆடுறேன் என்று கார்த்திக்கும் அஷோக்கும் போட்டி போட்டுக் கொள்ள ஆரம்பித்தார்கள். அல்பங்களா என்று நிலா தலையில் அடித்துக் கொண்டாள்.

‘எனக்கு இது ஓகே இல்ல. சூர்யா, உனக்கு தக்காளி முட்டை விக்கிறவங்க கூட கூட்டணி ஏதும் இருக்கா? என்ன இவனுங்களோட ஆட சொல்ற…. இவ்வளவு பெரிய ரிஸ்க் என்னால எடுக்க முடியாது’ என்றாள் நிலா.

கார்த்திக் அஷோக் இருவரின் முகமும் வாடிப் போனது. நிலா சொல்வது போல அவர்கள் இருவரும் மோசாமாக ஆடுபவர்கள் அல்ல.

‘நிலா என்னோட பயந்துட்டா போட்டி போட’ என்று வித்யா வம்பிழுத்தாள்.

‘நான் ஒன்னும் பயப்படலைடி. சரி வா நாம ரெண்டு பெரும் Solo dance ல் பதிவு பண்ணலாம். பார்க்கலாம் யார் ஜெயிக்கிறாங்க என்று’ கோபத்துடன் சொன்னாள் நிலா.

இப்படியே சென்றால் பெரிய சண்டை ஆகிவிடும் என்று நான் குறுக்கிட்டேன். “நண்பர்களே, நம்ம திட்டத்தை மாத்திடலாம். நமக்குள்ள எந்த சண்டையும் வந்திடக் கூடாது தனித்தனியா ஆடி. இப்ப என்ன உங்க ரெண்டு பேருல யாரு நல்ல ஆடுறீங்கன்னு தெரியனும். அவ்வளவு தான? நாங்க பார்த்து சொன்னா ஓகேவா இல்லை நடுவர்கள் சொன்னா மட்டும் தான் நம்புவீங்களா?’ என்றேன்.

‘எங்களுக்குள்ள யார் பெஸ்ட்ன்னு தெரியனும் அவ்வளோ தான். யாரு சொன்னாலும் ப்ராப்ளம் இல்லை’ என்றனர் நிலாவும் வித்யாவும்.

“அப்ப சரி. நீங்க ரெண்டு பெரும் சேர்ந்து ஆடுங்க. நீங்க ரெண்டு பெரும் சேர்ந்து வின்னரா இல்லையா என்று நடுவர்கள் பார்க்கட்டும். நாங்க 3 பெரும் உங்களில் யாரு பெஸ்ட்ன்னு சொல்றோம். இந்த டீல் ஓகேவா?” என்றேன்.

‘ஓகே’ என்றார்கள் இருவரும்.

தகுதிச் சுற்று வரும் வரை எந்த பிரச்சனையும் இருக்காது என்று தற்காலிக நிம்மதி வந்தது. நிலா வித்யா இருவரும் கிளம்பிச் சென்றனர்.

தகுதிச் சுற்று அன்று என்ன பண்ணப் போறேன் என்று தெரியலையே என்று நான் நினைத்துக் கொண்டிருக்கையில் அஷோக்கும் கார்த்திக்கும் நம்ம ஆட்டத்தை குறை சொன்ன நிலா சரியா ஆடலைன்னு சொல்லிடலாம் என்று பேசிக் கொண்டிருந்தனர். ‘அடப்பாவிங்களா! ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சனை. எல்லாவற்றையும் எப்படி சமாளிக்கப் போறேனோ!!! விடு சூர்யா அன்னைக்கு பார்த்துக்கலாம்’  என்று நானும் புறப்பட்டுச் சென்றேன் வீட்டிற்கு.

தகுதிச் சுற்று நாளும் வந்தது.
Solo dance ல் நானும், pair dance ல் நிலா வித்யாவும், Group Dance ல் நாங்கள்  ஐவரும் என்று எங்கள் நண்பர்கள் பட்டாளமே எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்றோம். வெற்றி பெற்றவர்களை அறிவித்ததும் வித்யாவும் நிலாவும் நேராக எங்களிடம் வந்தனர்.

‘எங்க ரெண்டு பேருல யாரு நல்லா ஆடினோம்?’ இருவரும்.

நிலாவைத் தான் சரியா ஆடவில்லை என்று கார்த்திக்கும் அஷோக்கும் சொல்லப் போகின்றனர் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அவர்கள் இருவரும் நிலாவைப் பார்த்தார்கள். அவளைப் பார்த்ததுமே பயம் தொற்றிக் கொண்டது போல எதற்கு வம்பு என்று 'சூர்யா சொல்லுவான்' என்று எஸ்கேப் ஆகி விட்டார்கள்.

‘சொல்லு சூர்யா’ என்றாள் நிலா.

‘நான் தான நல்லா ஆடினேன்’ என்றாள் வித்யா.

“நீங்க ரெண்டு பேரும் ஆடினதற்கு பெயர் தான் டான்சா?’ என்றேன்.

என்னை இருவருமே கையில் கிடைத்த புக்கை எடுத்து அடிக்க ஆரம்பித்தார்கள்.

‘சொல்லு டா யாரு பெஸ்ட் என்று’ இருவரும் என்னை விடுவதாய் இல்லை.

ஏதாவது கதை சொல்லி எஸ்கேப் ஆகி விட வேண்டியது தான் என்று “நீங்க ரெண்டு பேரும் என் கண்கள் மாதிரி. எந்த கண்ணு நல்லா பார்க்குது என்று சொல்ல முடியுமா? முடியாதில்ல? அப்படித் தான் உங்க ஆட்டமும். நீங்க ரெண்டு பேருமே பெஸ்ட். அதான் நீங்க ஜெயிச்சீங்க” என்றேன்.

‘நல்லா எஸ்கேப் ஆகிற. வித்யாவே என்னை விட நல்லா ஆடினதா இருக்கட்டும். நம்ம டீம்ல எல்லாருமே ஜெயிச்சிட்டோம் அது போதும் எனக்கு’ என்றாள் நிலா.

‘இல்ல நிலா நீ தான் என்னை விட நல்லா ஆடின’ இது வித்யா.

இருவரும் மாறி மாறி அன்பு மழை பொழிய கார்த்திக்கும் அஷோக்கும் இருவருக்கும் குடை பிடித்தனர்.

ஒன்பதாம் வகுப்பு மிக சந்தோஷமாக சென்றது. பத்தாம் வகுப்பில் இப்படி ஒரு பெரிய குண்டு வந்து விழும் என்று நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. மற்றவர்களை விட என்னையும் நிலாவையும் தான் அது மிகவும் பாதித்தது.

பத்தாம் வகுப்பு மாணவர்கள் அட்டவணை வந்தது. நான் 'அ' பிரிவு என்றும் நிலா 'ஆ' பிரிவு என்றும் இருந்தது அதில்….



உறங்கச் செல்கிறேன்….

Monday, October 14, 2013

கனவுகளைக் காதலிக்கிறேன் - 3

வித்யாவின் கூந்தலைப் பார்த்தவள் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்த்தாள். என்ன சொல்வது!!!! வித்யாவின் கூந்தல் தோள்பட்டை வரை கூட நீடிக்கவில்லை.

‘இதுக்கு தான் இந்த பில்டப் கொடுத்தியா?’ என்றாள் நிலா.

“இப்ப முடியை கம்மி பண்ணிட்டா. அதுக்கு நான் என்ன பண்ண முடியும். எனக்கு நீளமா இருந்தா தான் பிடிக்கும்னு சொன்னா திரும்ப வளர்க்கப் போறா”

‘முதல்ல அவளுக்கு உன்னை அடையாளம் தெரியுதான்னு பார்ப்போம்’

“அவளே வந்து எங்கிட்ட பேசு
வா பாரு” என்றேன்.

'பார்க்க தான போறேன்' என்றாள்.

'முடி கம்மியா இருந்தா என்ன அவ அழகு தான்' என்றேன். என்னை முறைத்துவிட்டுச் சென்றாள் நிலா.

நான் வித்யாவையே பார்த்துக் கொண்டிருந்தேன் அவள் ஒரு முறையாவது என்னை பார்த்து விட மாட்டாளா என்று. ஏதோ ஒரு படத்தில் வந்தது போல 10 எண்ணுவதற்குள் என்னைப் பார்த்து விடுவாள் என்று எண்ண ஆரம்பித்தேன். 1000 வரை எண்ணியது தான் மிச்சம்….

இடைவேளையில் என்னிடம் வந்து பேசுவாள் என்று எதிர்பார்த்தேன். அவள் முன்னே இரண்டு மூன்று முறை நடந்து சென்றேன் வேண்டுமென்றே. ஆனால் என்னுடைய முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்தன. இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நிலா என்னைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தாள். ‘போய் உன் இடத்துல உட்காருடா’ என்று கண்களால் சொன்னாள்.

மீண்டும் வகுப்பு தொடங்கியது. உணவு இடைவேளையும் வந்தது. நாங்கள் சாப்பிடப் போகத் தயாரானோம். அப்பொழுது திடீரென்று ஒரு குரல் ‘சூர்யா’ என்று.

இது வித்யாவின் குரல் தான். கண்டுபிடித்த பின்னும் தெரியாதபடி நிலா யாரோ என்னைய கூப்பிடுறாங்க என்றேன்.

‘யாரும் இல்லையே. வா சீக்கிரம் போகலாம் பசிக்குது’ என்றாள்.

“இல்ல யாரோ கூப்பிட்ட மாதிரி இருந்துச்சு. சரி வா போகலாம்” என்றேன்.

‘டேய் உன்னை எத்தனை முறை கூப்பிடுறது’ என்று என் முன்னே வந்து நின்றாள் வித்யா.

‘என்னை ஞாபகம் இருக்க இல்லையா சார்க்கு?’ என்றாள் வித்யா.

“உன்னை எப்படி மறப்பேன் வித்யா!!!!”

‘அப்புறம் எதுக்குடா எங்கிட்ட வந்து பேசல?’ லேசாக கோபித்தாள்.

“உனக்கு என்னை ஞாபகம் இருக்காதுன்னு நினைச்சேன்”

‘போடா புடலங்கா. உன்னை எப்படி மறப்பேன்? Missed you a lot’ என்றாள் வித்யா.

“Me too” என்று நான் சொல்ல வாய் எடுக்கும் முன் நிலா குறுக்கிட்டாள். ‘சூர்யா லன்ச்க்கு டைம் ஆச்சு. வா போலாம். வந்து பேசு உன் வித்யா கிட்ட’ என்றாள்.

நானும் சேர்ந்துக்கலாமா உங்க கூட என்று வித்யா கேட்க கண்டிப்பாக என்றேன். நிலா என்னை எரித்துக் கொண்டிருந்தாள் அவள் பார்வையால்.

நான் என் நண்பர்களை அறிமுகம் செய்தேன் வித்யாவிற்க்கு. ‘இது நிலா’ என்று நான் சொல்ல நிலா ‘சூர்யாவின் பெஸ்ட் பிரண்ட்’ என்றாள். ‘என்னைய விடவா’ என்றாள் வித்யா. “இவங்க ரெண்டு பேரையும் எப்படி சமாளிக்க போறேனோ” என்று மனதினுள் நினைத்துக் கொண்டேன்.

அடுத்து அஷோக் கார்த்திக்கையும் அறிமுகம் செய்தேன். அவர்களுடன் கை குலுக்கி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள் வித்யா. ‘வலியுது டா. தொடச்சுக்கோங்க’ என்றாள் நிலா அவர்கள் இருவரையும் பார்த்து. சாப்பிட்டு விட்டு க்ளாஸிற்கு வந்தோம்.

ஒரு வாரம் சென்றது. ஃபிஸிக்ஸ் கிளாஸ் நடந்து கொண்டிருந்தது. ஒரு அறிவிப்பு வந்தது பள்ளிகளுக்கு இடையிலான நடனப் போட்டி பற்றி. Solo dance, group dance பிரிவுகளில் நம்ம பள்ளியில் இருந்து கலந்துக்கனும் என்று.

நிலா என்னிடம் வந்தாள். ‘நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஆடுறோம். பேர் கொடுப்போம்’ என்றாள். அதே நேரம் வித்யாவும் ‘நம்ம கெமிஸ்ட்ரீ நல்லா இருக்கும். நாம ரெண்டு பேரும் ஆடலாம்’ என்றாள்.

'ஸ்கூல்ல யார்கிட்டனாலும் கேளு. எங்களோட physics chemistry maths biology பத்திலாம் சொல்லுவாங்க' என்றாள்.

'எவ்வளோ நாள் தான் இப்படி ஒரே முகத்தையே அவங்க பார்ப்பாங்க. பாவம் அவங்க. அதனால இந்த முறை நாங்க ஆடுறோம்' என்றாள் வித்யா.

‘நீ என் கூட தான ஆடப் போற என்று’ நிலா கேட்க ‘இல்ல என்னோட தான் ஆடுவான்’ என்று வித்யா பதில் சொல்ல “என்ன கொடுமை சரவணன் இது.. என்ன பதில் சொல்வது” என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன்….
 

உறங்கச் செல்கிறேன்….

Wednesday, October 09, 2013

கனவுகளைக் காதலிக்கிறேன் - 2

“நானும் சேர்ந்துக்கலாமா உங்க விளையாட்டுல?” என்றேன் நிலாவிடம்.

‘கண்டிப்பாக சூர்யா’ என்றவள் அவளது நண்பர்களையும் கூப்பிட்டாள். ‘இவன் கார்த்திக், இவன் அசோக்’ என்று அறிமுகம் செய்தாள். அவர்கள் இருவருக்கும் என்னைப் பிடிக்கவில்லை. என்‌னைப் பிடிக்கவில்லை என்பதை விட நான் நிலாவிடம் பேசுவது மட்டும் பிடிக்கவில்லை என்பதே சரியாக இருக்கும். நிலாவிற்காக என்னையும் சேர்த்துக் கொண்டார்கள் இருவரும். நாங்கள் நால்வரும் ஒளிந்து பிடித்து விளையாடினோம். மூன்று பேர் மட்டுமே விளையாடக்  கூடிய விளையாட்டு ஏதாவது இருக்கின்றதா என்று அவர்கள் இருவரும் ஆராய ஆரம்பித்தார்கள் என்னை எப்படியாவது கழட்டி விட வேண்டும் என்று.

வருடங்கள் சென்றதே தெரியவில்லை. நாங்கள் இப்பொழுது 8 ஆம் வகுப்பில் இருக்கிறோம்.

ஒரு நாள், “ஏன் நிலா உனக்கு பொண்ணுங்க பிரண்ட்ஸ் யாரும் இல்லையாயா?” என்று கேட்டேன்.

‘எனக்கு பொண்ணுங்களோட ஒத்துப் போக மாட்டேங்கிது டா’ என்றாள்.

“நீயும் என்னை மாதிரி தானா?”

‘ஏன்? என்னைத் தவிர வேற எதாச்சும் பொண்ணுங்க பிரண்ட்ஸ் இருக்கா உனக்கு’ – சிறு கோபம் தெரிந்தது அவளிடம்.

“வித்யா”

‘அவளைப் பத்தி நீ ஏதுமே எங்கிட்ட சொன்னது இல்லை இதுவரை?’

“நீ கேட்கல நானும் சொல்லல”

‘சரி இப்ப கேட்கிறேன். உன் வித்யா பத்தி சொல்லு?’

“எப்படி சொல்றது. புள்ளைன்னா அவ தான் நடந்து வர்றால மிதந்து வர்றாலான்னே தெரியாது…”

என்‌னை நிறுத்தியவள் ‘அடங்குடா இதை எல்லாம் நான்  சண்டைக்கோழி படத்திலேயே பார்த்துட்டோம். வேற எதாச்சும் சொல்லு’ என்றாள்.

“அவளைப் பத்தி நான் என்ன சொல்ல. அவளை ஒரு நாள் கூட்டிட்டு வர்றேன் அப்ப நீயே பார்த்துக்கோ”

‘எனக்கு அவளைப் பார்க்க இஷ்டம் இல்லை’

“ஹ்ம்ம் அவ ஃபோடோ இருந்த எடுத்திட்டு வர்றேன். அம்மாகிட்ட கேட்டுப் பார்க்கிறேன்”

ஒரு ____ம் வேணாம் என்பது அவள் கண்களிலேயே தெரிந்தது.

‘என்னை விட உனக்கு ரொம்ப க்ளோஸா?’

“என்ன சொல்ல!!!! அவகிட்ட பேசியே 6 வருஷம் மேல ஆயிடுச்சு. அவளைப் பார்த்தும் தான். உனக்கு ஒன்னு தெரியுமா அவளுக்கும் உன்னை மாதிரி அழகான கூந்தல் தான். எனக்கு உன்னை பார்க்கும் போதெல்லாம் அவ ஞாபகம் தான் வரும். உங்க ரெண்டு பேரிடமும் எனக்கு ரொம்ப பிடிச்சது Long hair தான்”

‘என்னைப் பார்க்கும் போது உனக்கு ஒன்னும் அவ ஞாபகம் வரத் தேவை இல்லை. நான் என் முடியை ஷார்ட்டா கட் பண்ணப் போறேன்’

“அப்படி எல்லாம் பண்ணிடாத. உனக்கு அழகே உன் முடி தான்”

‘நான் எதுக்கு வெட்டணும். நான் முடியை நீளமா வளர்க்கிறது அஷோக், கார்த்திக்காக தான். ரெண்டு பெரும் பயங்கர பைத்தியம் என் ஹேர் மேல. என் ஜடையை இழுத்து விளையாடலைன்னா அவங்க ரெண்டு பேருக்கும் உறக்கமே வராது. அவங்க தூக்கத்தை நான் கெடுக்க விரும்பலை’ என்னைக் கடுப்பேற்ற ஆரம்பித்த்தாள்.

“நானும் இப்படி தான் வித்யா ஜடையை இழுத்து விளையாடுவேன்” பதிலுக்கு வெறுப்பேற்றினேன்.

‘ஹ்ம்ம். என்னோட முடியை விட அவளுக்கு நீளமா?’ - சற்று சோகமானாள்.

“ஒரே அளவுன்னு தான் நினைக்கிறேன்” தப்பிக்க முயற்சித்தேன்.

‘அது எப்படி இருக்க முடியும்? கொஞ்சமாவது வித்தியாசம் இருக்கும்ல’

“தெரியல நிலா. நேர்ல எப்பவாது ரெண்டு பேரையும் சேர்த்து பார்த்தா சொல்றேன்” என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆனேன்.

ஒன்பதாம் வகுப்பில் காலடி எடுத்து வைத்தோம். எங்கள் கிளாஸ் டீச்சர் ஹென்றி சார் புதிதாக சேர்ந்தவர்களை ஒவ்வொருவராய் அறிமுகம் செய்து கொண்டிருந்தார். அவர் பேரை சொன்னதும் ஒவ்வொருவராய் மேடையில் தங்களை அறிமுகம் செய்து கொண்டு செல்வார்கள்.

அப்பொழுது அவர் ‘வித்யா’ என்று அழைக்க நான் சிறிது ஆவலானேன். என்னைவிட இந்த வித்யா யார் என்று மிக எதிர்பார்த்தது நிலா தான். வித்யா வந்ததும் என் முகம் பிரகாசமாய் மாறியது. நான்  விட்ட ஜொள்ளிலேயே புரிந்திருக்கும் நிலாவிற்கு இந்த வித்யா தான் அவள் என்று. இருந்தாலும் ‘உன் க்ளோஸ் பிரண்ட் வித்யா?’ என்று என்னிடம் கேட்டு உறுதி செய்து கொண்டாள்.

வித்யா தன்னை அறிமுகம் செய்து விட்டு திரும்ப நடந்து சென்று கொண்டிருந்தாள். நிலா, வித்யாவின் கூந்தலை கவனிக்க ஆரம்பித்தததை நான் பார்க்கத் தவறவில்லை….
 

உறங்கச் செல்கிறேன்….

Tuesday, October 01, 2013

கனவுகளைக் காதலிக்கிறேன் - 1

நான் இப்படி ஒரு புது உலகத்தில் மாட்டிக்கொள்வேன்  என்று ஒருபோதும் நினைத்து பார்க்கவில்லை. எல்லாமே எனக்கு புதியதாய் இருந்தது. எந்த முகமும் எனக்கு பரிட்சயமானதாய் இல்லை. வித்யாவின் ஞாபகம் என்னை வாட்டி வதைத்தது. அவளை நினைத்து அழுது அழுது என் கண்கள் குளமாக மாறி இருந்தது. என் அம்மா தான் நான் வித்யாவை பிரிந்ததற்கு காரணம். நான் எவ்வளவோ பிடிவாதமாய் இருந்தும் என் அம்மா இரங்கி வரவில்லை. வித்யா அவளை நினைத்து பார்த்தால் எனக்கு முதலில் ஞாபகத்திற்கு வருவது அவள் ரெட்டை ஜடை தான். என்னைப் பொருத்த வரை இவ்வுலகில் அவளுடைய கூந்தல் தான் மிக நீளமானது. அவள் ஜடையை ஒரு நாளைக்கு 100 முறையாது பிடித்து விளையாடவில்லை என்றால் எனக்கு உறக்கமே வராது. மற்றவர்கள் அவள் ஜடையை பிடித்து இழுத்தால் திட்டுபவள் என்னை மட்டும் எதுவும் சொல்ல மாட்டாள். அடுத்து அவள் கண்கள். அவள் உதடுகள் பேசி இதுவரை நான் கேட்டதே இல்லை. கண்களால் பேசி என்னை வீழ்த்தியவள்.

“வித்யாவும் இப்பொழுது என்னைப் போல புலம்பிக் கொண்டிருப்பாளோ? இல்லை Life has to go on என்று என்னை மறந்து தனது புது வாழ்க்கையை தொடங்கி இருப்பாளோ?” இது போன்ற ஓராயிரம் கேள்விகள் எனக்குள் பிறந்து கொண்டே இருந்தன. எல்லா கேள்விகளுக்கும் விடை தர வேண்டியவள் வித்யா. அவளை எப்படி தொடர்பு கொள்வது என்று கூட எனக்கு தெரியவில்லை. மண்டையே வெடித்து விடும் போல இருந்தது. மனம் போன போக்கிலே நடக்க ஆரம்பித்தேன் நான்காவது மாடியை அடைந்தேன். அங்கு இருந்து உலகத்தையே காண முடிந்தது என் வித்யாவைத் தவிர.

இன்னும் 10 நிமிடங்கள் தான் இருக்கின்றது. நான் மீண்டும் எனக்கு பிடிக்காத உலகத்திற்குள் நுழைய வேண்டும். என் விதியை நினைத்து நொந்து கொண்டேன். திரும்பச் சென்றேன் என் இடத்திற்கு. அங்கிருந்த அனைவருக்கும் ஒரு துணை இருந்தது. சிலருக்கு ஒன்றுக்கு மேலும் இருந்தது. இவ்வளவு வளர்ந்த பின்னும் ஓடி பிடித்தும் ஒளிந்தும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இப்படி பக்குவமே இல்லாத கும்பலிடம் மாட்டிக்கொண்டேனே என்று வருத்தமாய் இருந்தது. நான் ஓரமாக இருந்து இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் பார்ப்பதை பார்த்துவிட்ட ஒருவன் என்னிடம் வந்தான், 'நான் அவளை டச் பண்ணிட்டேன்ல அவ அவுட் ல' என்று கேட்டான். அவனை அப்படியே எரித்து விடுவது போல பார்த்தேன். அப்படியே நகர்ந்து சென்று விட்டான் அவன் இடத்திற்கு.

அப்படி அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்த வேளையில்தான் முதன் முதலாக அவளை கவனித்தேன். அவளை கவனிக்க வைத்தது அவளது கூந்தல் தான். வித்யா கூந்தலை விட இவளுக்கு நீளம் ரொம்ப அதிகமாக இருந்தது. கண்களும் வித்யாவை விட அழகாக இருந்தது. வித்யாவை கொஞ்ச நேரம் மறந்து விட்டு இவளை ரசிக்க ஆரம்பித்தேன். அவளை முதலில் எப்படியாவது தோழியாக்கிக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஆனால் ஒரு மூன்று பொறுக்கி பசங்க (எனக்கு மட்டும் பொறுக்கிகளாய் தோன்றினார்கள்) அவளிடம் போட்டிப் போட்டுக் கொண்டு கடலை போட்டுக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் பேசிவிட்டு அவள், தன் இடத்திற்கு சென்று அமர்ந்தாள்.

நான் நேராக அவளிடம் சென்றேன். 'Hi, I am Surya' என்றேன்.

“I am Nila” என்றாள்.

அடுத்து என்ன பேசலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில், காட்டுக் கூச்சலாய் இருந்த அந்த இடம் தீடீரென்று மயான அமைதியாய் மாறியது. அனைவரும் அவரவர் இருக்கையில் சென்று அமர நானும் அமர்ந்தேன் என் இடத்தில். நிலாவை விட்டுச் செல்ல மனமின்றி.

மேடம் ஒருவர் உள்ளே நுழைந்தார். எங்களைப் பார்த்து பேச ஆரம்பித்தார். முதல் நாள் என்ன நடக்கப் போகிறதோ என்று மனதிற்குள் திக் திக் என்று இருந்தது.

“Hello my dear students, welcome to class II. என்னோட பேர் ரீட்டா, நான் தான் உங்க க்ளாஸ் டீச்சர். முதள் நாள் அதனால இன்னைக்கு க்ளாஸ் வேண்டாம். Attendance கொடுத்திட்டு விளையாடப் போலாம்” என்றார்.

வருகைப்பதிவு முடிந்ததும் நான் நேராக நிலாவை நோக்கிச் சென்றேன்.

உறங்கச் செல்கிறேன்….