Pages

Monday, May 09, 2011

D70

ஏப்ரல் 19, 2010

வீணாவின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தேன் "Nivetha Working Women Hostel" அமைந்து இருக்கும் தெரு முனையில். 15 நிமிடங்கள் ஆகியும் வீணா வராததால் போன் செய்தேன்.

'என்னடி பண்ணிட்டு இருக்க? இன்னும் லேட் ஆகுமா?'

"தலை சீவிட்டு இருக்கேன்டா? பத்து நிமிஷத்துல வர்றேன்"

'ஒன்னும் அவசரம் இல்ல வீணா'

"எப்பவும் லேட் ஆனா கோபப்படுவ? இன்னைக்கு என்னாச்சு சாருக்கு? ஒன்னும் புரியலையே. எங்க ஹாஸ்டல் பொண்ணுங்களை சைட் அடிச்சிட்டு இருக்கியா? எல்லா பொண்ணுங்ககிட்டயும் உன்னை அண்ணன்னு கூப்பிடனும்னு சொல்லி வச்சு இருக்கேன். பார்த்துக்கோ"

சிரித்தேன்.

'சைட் லாம் அடிக்கல மா. நான் ரொம்ப கோபப்படுறேன். உனக்காக என்னை கொஞ்சம் மாத்திக்கலாம்ன்னு தோனுச்சு அதான். உனக்காக காத்து இருக்கிறதும் சுகமா இருக்கு. இந்த சுகத்தை இவ்வளவு நாள் இழந்திட்டேனேன்னு என் மேல கோபமா வருது'

"மறுபடியும் கோபமா!" - சிரித்தாள். "உனக்காக 5 நிமிஷத்துல அங்க இருப்பேன்டா. இனிமேல் கரெக்ட் டைமுக்கு கிளம்ப கத்துக்கிறேன் என் செல்லத்துக்காக" - போனை வைத்தாள் வீணா.

ஒரு சிகரெட்டை எடுத்து பத்த வைத்தேன். வீணா வருவது தெரிந்தது. சந்தோசமாக வருவாள் என்று எதிர்பார்த்தேன் மாறாக கோபத்துடன் வந்து கொண்டிருந்தாள்.

"கார்த்திக் எனக்காக இன்னொன்னு மாத்திப்பியா?"

'Anything for you'

"இதுக்கெல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்ல. எத்தன முறை சொல்லி இருக்கேன் இனிமேல் நீ எப்பவும் தம் அடிக்கக் கூடாதுன்னு. Please quit smoking Karthik"

'நான் சிகரெட் பிடிக்கிற ஸ்டைல் ரொம்ப பிடிக்கும்ன்னு சொல்லுவ'

"எனக்கு ரொம்ப பயமா இருக்கு கார்த்திக். ப்ளீஸ் புரிஞ்சுக்கோ. அப்படி உன்னால தம் அடிக்கிறதை விட முடியாதுன்னா என்னைய விட்டுடு"

'இனிமேல் தம் அடிக்கமாட்டேன் வீணா. அதுக்காக உன்னைய விட்டுடனும் அது இதுன்னு ஏதும் சொல்லாத. என்னால தாங்கிக்க முடியாது'

"உன்னைய பார்த்தாலும் பாவமா தான் இருக்கு. சரி பரவா இல்லை. சிகரெட் பிடிச்சுக்கோ. ஆனால், ஒரு கண்டிஷன் பத்த வைக்காம பிடிக்கணும்"

'அதான பார்த்தேன். வாரத்துக்கு ஒன்னு வேணா அடிச்சுக்கோன்னு சொல்லப் போறியோன்னு நினைச்சேன். இனிமேல் சிகரெட்டை தொடவே மாட்டேன் தாயி. போதுமா?'

"Thats my boy. ஆமா இன்னைக்கு என்னாச்சு? ரொம்ப பொறுமையா என்ன சொன்னாலும் கேட்டுக்கிற?"

'உனக்காக உன் பாசத்துக்காக. சரி, எங்க போலாம் வீணா?'

"கோவிலுக்கு போய் ரொம்ப நாள் ஆச்சு டா. வடபழனிக்கு போகலாம்"

'சரிடி'

D70 வோல்வோ பஸ். வடபழனிக்கு இரண்டு டிக்கெட் வாங்கினாள் வீணா. "உனக்காகத் தானே இந்த உயிர் உள்ளது" கற்றது தமிழ் பாடல் பாடிக் கொண்டிருந்தது.

பேச்சைத் தொடர்ந்தாள்.

"நான் உனக்காக எதாச்சும் பண்ணனுமே.. என்ன பண்ணலாம்??"

யோசித்தாள்.

"நான் இப்படி எல்லாம் நாம வாழணும்னு நினைச்சு வச்சு இருக்கேன். எனக்கு தோனும் போதெல்லாம் உன்கிட்ட சொல்லுவேன் சரியா?"

'சொல்லு மா. கேட்க ரொம்ப ஆசையா இருக்கு'

சில நிமிடங்களுக்குப் பின்,

"கார்த்திக் நீ கிரிக்கெட் மேட்ச் பார்க்கும் போது நான் வேற சேனல் பார்க்கனும்னு உன்கூட சண்டை போட மாட்டேன். உன்கூட சேர்ந்து நானும் இந்தியாவிற்கு சப்போர்ட் பண்ணுவேன். சரியா?"

சிரித்தேன்.

"அப்புறம் நான் எந்த சீரியலும் பார்க்க மாட்டேன் அதனால உனக்கு எந்த ப்ராப்ளமும் இல்ல. சரியான நேரத்துக்கு சாப்பாடு ரெடி பண்ணிடுவேன். நான் தான் உனக்கு பரிமாறுவேன். நீயே போய் எடுத்து போட்டுக்கோன்னு சொல்ல மாட்டேன். நம்ம வீட்ல நோ சீரியல்ஸ்"

'இதுல ஒரு சின்ன பிரச்சனை இருக்கு டி'

"என்ன டா?"

'நீ என்னை ரெண்டு சீரியல் பார்க்க விடனும்'

"அடப்பாவி! நீயா? இப்ப எல்லாம் பசங்க சீரியல் பார்க்க ஆரம்பிச்சிட்டீங்களா? அம்மா சீரியல் பார்த்தாலே நான் அப்படி சண்டை போடுவேன் அவங்களோட. பாருடி உன்னை கட்டிக்கப் போறவன் சீரியல் பார்க்கப் போறான்னு சொன்னாங்க. அவங்க சொன்னது உண்மை ஆயிடுச்சே!"

'இல்லைடி விஜய் டிவி ல ரெண்டு சீரியல் நல்லா இருக்கும். நீயும் பாரு சரியா?'

"நான் சீரியல் பக்கமே போல சாமி. சரி அப்படி என்னை சீரியல்ஸ் தான் பார்க்கிற?"

'மதுரை, இன்னொன்னு அன்பே வா'

"சொல்றதுக்கு ஒன்னும் இல்ல. சரி இது ரெண்டும் முடிஞ்சதுக்கு அப்புறமா வேற ஏதும் பார்க்க மாட்டல்ல?"

'மாட்டேன் டி. இதுல வர்ற காதல் ரொம்ப அழகா இருக்கும். அதனால தான் எங்க ரூம்ல எல்லாருமே பார்ப்போம்'

"பாலாஜி அண்ணனுமா?"

'அவன் தான்டி எனக்கு இந்த சீரியல் பத்தி சொன்னதே'

"அடப்பாவிங்களா. என்ன கொடுமை இது?"

'வடபழனி சிக்னல்' என்று கண்டக்டர் சொல்ல இருவரும் இறங்கி கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

"சார் பூ வாங்கிட்டு போங்க சார்"

'ஒரு முழம் எவ்வளவு அக்கா?'

"அஞ்சு ரூபாய் சார்"

'எவ்வளவு டி வாங்க?'

"4 முழம் தாங்க. ஒவ்வொரு முழமா கட் பண்ணி தாங்க" என்றாள் வீணா.

"இந்தாங்கம்மா. சார் அம்மாவுக்கு பூ?"

'ஆறு முழம் கொடுங்கம்மா'

"டேய் ஆறு முழம் எதுக்கு? அதுவும் சாமிக்கு வாங்கியதை விட எனக்கு அதிகமா?"

'கண்ணுக்குத் தெரியாம வரம் தந்துட்டு இருக்கிற சாமிக்கு நாலு முழம் வாங்கும் போது என் கண்ணு முன்னால நின்னுட்டு வரம் தந்திட்டு இருக்கிற தேவதைக்கு ஆறு முழம் வாங்கக் கூடாதா?'

"எப்படி தான் இப்படி எல்லாம் பேசக் கதுக்கிட்டியோ. ஆனால், யாரையும் சாமி கூட ஒப்பிட்டு பேசாத டா. கார்த்திக், ஆறு முழம் பூ வைக்க என் கூந்தல்ல இடம் இல்லை டா" என்று பாவமாய் பார்த்தாள்.

"அம்மா சார் ஆசையா வாங்கிக் கொடுத்து இருக்காரு. சண்டை போடாம வச்சுக்கோங்கம்மா"

'இவனுக்கு நீங்களும் சப்போர்ட்டா' என்று சொல்லிக் கொண்டே பூவை சூடிக் கொண்டாள் வீணா.

ஐம்பது ரூபாய் கொடுத்துவிட்டு இருவரும் கோவிலுக்குள்ளே நடக்க ஆரம்பித்தோம்.

'லூசு ரொம்ப ரொம்ப அழகா இருக்கடி'

சிரித்தாள் வெட்கத்துடன்.

'விநாயகருக்கு என் மேல பயங்கர கோபமா இருக்கும்டி...'

"ஏன்?"

'அவரும் ரொம்ப நாளா ஒரு பொண்ணை தேடிட்டு இருக்காரு. கிடைக்க மாட்டேன்கிறது. ஆனால், தேவதையாய் ஒரு பொண்ணு என் பக்கத்துல நிற்கிறதை பார்த்தா கோபம் வராம இருக்குமா'

"கார்த்திக் சாமி கும்பிடும் போது பேசக் கூடாது" என்று சொல்லிவிட்டு, முணு முணு என்று சாமியிடம் வேண்டிக் கொள்ள ஆரம்பித்தாள். நானோ சாமி கும்பிடாமல் அவள் முணு முணுக்கும் அழகை ரசித்துக் கொண்டிருந்தேன்.

கோவிலை விட்டு வெளியே வந்தோம்.

'பசிக்குது சாப்பிடப் போலாம் டி'

"எங்க?"

'சரவண பவன்'

"கார்த்திக் நான் வெஜ் சாப்பிடப் போலாம்"

'இப்ப தான்டி கோவிலுக்கு போயிட்டு வந்தோம்'

"ஆமால்ல. சரி வா சரவண பவனுக்கே போலாம்" சலித்துக் கொண்டே சொன்னாள்.

'என்னடி இப்படி சலிச்சுக்கிற? எனக்காக இன்னைக்கு வெஜ் சாப்பிடு. இங்க பாரு மா நான் உன்னை நான்-வெஜ் சாப்பிட வேணாம்னு சொல்லல. கொஞ்சம் குறைச்சுக்க ட்ரை பண்ணு. வீட்டில நாங்க எல்லாரும் சுத்த சைவம். அம்மா...' என்று நான் சொல்லி முடிப்பதற்குள்

"கவலையே படாத கார்த்திக். அம்மா வீட்டுக்கு வரும் போது கண்டிப்பா நம்ம வீட்டில வெஜ் தான் இருக்கும். போதுமா? அத்தைக்கு பிடிச்ச மாதிரி நான் நடந்துக்குவேன் டா"

'அப்புறம் இன்னொன்னுடி. அம்மா முன்னால மட்டும் என்னை வாடா, போடான்னு ஏன் பேர் சொல்லிக் கூட கூப்பிடாத'

"இதெல்லாம் கூட எனக்கு சொல்லித் தரனுமாங்க. எனக்கு தெரியுங்க. இப்படி பேசுனா போதுமாங்க?"

எனக்கு சிரிப்பு தான் வந்தது.

'நீ மரியாதையா பேசும் போது எனக்கு சிரிப்பு தான் டி வருது. ஆனால், வேற வழி இல்லை. நீ இப்படி தான் கூப்பிட்டு ஆகனும் அம்மா முன்னால'

"சரிங்க மாமா"

'கடவுளே'

வெயிட்டர் குறுக்கிட்டார். "சார் என்ன சாப்பிடுறீங்க"

'என்ன டி சாப்பிடுற'

"உங்களுக்கு என்ன தோனுதோ ஆர்டர் பண்ணுங்க. ஆனா எல்லாமே ஒரு ப்ளேட் தான். எனக்கு தனியா ஆர்டர் பண்ணாதீங்க'

'சாம்பார் இட்லி, ஒரு ப்ளேட் தயிர் வடை, அப்புறம் ஒரு நெய் ரோஸ்ட்' என்றேன் வெயிட்டரிடம்.

'இங்க பாருடி அம்மா இருக்கும் போது மட்டும் தான் மரியாதை தரச் சொன்னேன். வாடா போடான்னு மத்த நேரம் கூப்பிடு. அதான் எனக்கு பிடிச்சிருக்கு'

'சரி டா'

இருவரும் சாப்பிட்டு முடித்தோம்.

'சார் டீ, காபி?'

வீணா வேண்டாம் என்று தலை அசைக்க 'வேண்டாம்' என்றேன். பில் கட்டி விட்டு இருவரும் வெளியே வந்தோம்.

"கார்த்திக், டீ, காபி ன்னு அவர் சொன்னதும் தான் ஞாபகம் வருது. சனி, ஞாயிறு, லீவ் நாட்கள்ல நீ தான் என்னை காபி போட்டு வந்து எழுப்பி விடனும் சரியா? என்னைய லீவ் அன்னைக்கு நல்லா உறங்க விடனும் டா"

'டீ coffee மட்டும் தானா இல்லை சமையலும் நான் தானா?'

"சமையல் கண்டிப்பா நான் தான். என் புருசனுக்கு ரொம்ப வேலை தர மாட்டேன்"

அவளே தொடர்ந்தாள்.

"ஆனா கார்த்திக், நம்ம குழந்தைங்களுக்கு நீ தான் பாடம் சொல்லித் தரனும். அதுவும் கணக்கு கண்டிப்பா நீ தான் டா. சரியா?"

'என்னடி திடீர்னு பாடம் சொல்லித் தர்றதை பத்தி பேசுற?'

"ஒரு குழந்தை ஸ்கூல் யுனிபார்ம் போட்டு போயிட்டு இருக்கிறதை பார்த்தேன். அதான் திடீர்னு தோனுச்சு"

'ஹ்ம்ம் சரி டி. நானே சொல்லித் தரேன் போதுமா'

அவள் முகத்தில் ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோஷம் இருந்தது.

இருவரும் மீண்டும் D70 ஏறினோம்.

"கார்த்திக்.. கார்த்திக்"

'சொல்லு மா'

"நமக்கு ரெண்டு குழந்தைங்க சரியா. முதல்ல பையன் ரெண்டாவதா ஒரு பொண்ணு. ஓகே வா?"

'இல்லைடி முதல்ல பொண்ணு தான் அதுவும் உன்னை மாதிரியே'

"போ.. முதல்ல பையன் தான்"

'இல்லை பொண்ணு தான்'

"சரி உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம். ஒரு பையன் ஒரு பொண்ணு. ஆனால் பொண்ணு உன்னை மாதிரி இருக்கனும் பையன் என்னை மாதிரி இருக்கனும். ஓகே வா?"

'இல்லைடி ரெண்டு பேரும் உன்னை மாதிரி தான் இருக்கனும்'

"போ.. நான் சொன்ன மாதிரி தான்"

நாங்கள் இறங்க வேண்டிய தண்டீஸ்வரம் ஸ்டாப் வந்தது. இறங்கி ஹாஸ்டல் நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

'கார்த்திக் என் கூடவே இரு டா'

'உன் ஹாஸ்டல்ல என்னை சேர்த்துக்குவாங்களா?'

"நான் உன்னை என் ஹாஸ்டல்ல இருக்க சொல்லல. சீக்கிரம் என்னை கல்யாணம் பண்ணிக்கோ டா. நான் உன்னோட வாழனும். நமக்குன்னு ஒரு வீடு. குழந்தைங்க. அத்தை மாமா அம்மா அப்பா.. நினைச்சு பார்த்தாலே ரொம்ப சந்தோசமா இருக்கு டா"

'எனக்கும் தான் லூசு. இன்னைக்கு நீ பேசினதை கேட்கும் போதே எனக்கு அவ்வளவு சந்தோசமா இருக்கு.. வாழ்ந்தா எப்படி இருக்கும்?'

"கார்த்திக் இப்ப போய் கல்யாணம் பண்ணிக்கலாமா?"

'உனக்கு ஏதோ ஆயிடுச்சு இன்னைக்கு. ஏன்டி கோவில்ல இருக்கும் போது சொல்லி இருக்க மாட்ட? இப்ப கோவில் திறந்திருக்காதே. நாளைக்கு பண்ணிக்கலாம். சரியா?'

"நாளைக்கு வரை காத்து இருக்கனுமா? போ டா"

சிரித்தேன்.

"சிரிக்காத லூசு. போ. Missing you a lot..."

'என்னடி ஆச்சு. நாளைக்கு உன்னை மறுபடியும் பார்க்கப் போறேன்'

"தெரியலை டா. உன்னை ஒரு நிமிஷம் கூட என்னால பிரிஞ்சு இருக்க முடியலை டா. ஒவ்வொரு நிமிஷமும் நான் உன்னை எவ்வளவு மிஸ் பண்றேன்னு எனக்கு சொல்லத் தெரியலை"

'புரியுது டி எனக்கு. நீ சொல்லிடுற. நான் சொல்ல மாட்டேன்கிறேன். அவ்வளவு தான் வித்தியாசம். அம்மாகிட்ட இன்னைக்கே பேசுறேன் டி நம்ம கல்யாணத்தைப் பத்தி'

"நானும் பேசப் போறேன் டா"

'ஹ்ம்ம் சரி டி. குட் நைட். கிளம்பட்டுமா?'

"இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம் பேசிட்டுப் போடா"

அந்த இடத்தை விட்டு நகர எனக்கும் மனசில்லை. இருவரும் பேச ஆரம்பித்தோம்...

09-05-2011

"நல்லா ஆடுனீங்க பாஸ். கடைசியா அடிச்ச சிக்ஸ் சூப்பர் ஷாட். நீங்க ஒன் டவுன் இறங்கி இருந்தா ஜெயிச்சு இருக்கலாம்" எங்கள் எதிர் அணியில் விளையாடிய ஒருவர் வந்து கை குலுக்கினார்.

'தேங்க்ஸ் பாஸ்..' என்றேன்.

"By the way, my name is varun" என்றார்.

'I am karthik. He is Ashwin and he is Ranga' என் நண்பர்களையும் அறிமுகம் செய்தேன்.

நால்வரும் பேசிக் கொண்டே க்ரௌண்டை விட்டு வெளியே வந்தோம்.

தம் என்று அவர் சிகரெட் பாக்கெட்டை நீட்ட ரங்காவும் அஷ்வினும் ஆளுக்கொன்றை எடுத்து பற்ற வைத்தனர்.

'கார்த்திக் நீங்க?'

'நான் ஒரு வருஷமா தம் அடிக்கிறது இல்ல வருண்'

அன்று நடந்த கிரிக்கெட் போட்டியைப் பற்றி பேசிக் கொண்டே நடந்தோம். 26th மெய்ன் வந்ததும் 'இதான் என் வீடு, எல்லாரும் வீட்டுக்குள்ள வாங்களேன். டிபன் சாப்பிட்டு போகலாம்' என்றார் வருண்.

"என்ன பாஸ் டிபன்?" என்றான் ரங்கா.

"தோசை சட்னி தான்" என்றார் வருண்.

"தோசைக்கு சிக்கன் குழம்புன்னா நல்லா இருக்கும் பாஸ். சிக்கன் குழம்பு வச்சுட்டு கூப்பிடுங்க கண்டிப்பா வர்றேன்" என்றான் ரங்கா.

"பாஸ் சும்மா பேச்சுக்கு கூட சாப்பிடக் கூப்பிடாதீங்க. உடனே நுழைஞ்சிடுவோம். பார்த்துக்கோங்க" - அஷ்வின்.

"நிஜமா தான் கூப்பிடுறேன். ஆனா இந்த வாரம் நான்-வெஜ் சமைக்க மாட்டோம் வீட்டில. வைப் சுத்த சைவம். மாமியார் வேற ஊரில இருந்து வந்திருக்காங்க. அடுத்த வாரம் நீங்க சொன்னதை ரெடி பண்ணிடலாம். என்ன ரங்கா ஓகே வா?" - வருண்.

'லவ் மேரேஜா வருண்?' - நான்.

"ஆமா"

'நீங்களும் உங்க மனைவியும் வேற வேற ஜாதியா வருண்?'

"ஆமா பாஸ்"

"இதெல்லாம் நீ ஏன் கேட்டுட்டு இருக்க? சாப்பாடு போட்டா சாப்பிட்டு மட்டும் போக வேண்டியது தான?" - அஷ்வின் கிண்டலடித்தார்.

'உங்க அம்மா அப்பா, அவங்க அம்மா அப்பா எல்லார் சம்மதத்தோட தான் உங்க கல்யாணம் நடந்துச்சா?'

"ஆமா கார்த்திக்" என்றார் வருண்.

'Congrats Varun. My best wishes'

"தேங்க்ஸ் கார்த்திக். கண்டிப்பா நீங்க எல்லாரும் ஒரு நாள் வீட்டுக்கு வரனும்" - வருண்.

'கண்டிப்பா வருண். சரி நான் கிளம்புறேன்' - அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினேன்.

D70 வந்தது. ஏறி அமர்ந்தேன்.

"நமக்குன்னு ஒரு வீடு. குழந்தைங்க. அத்தை மாமா அம்மா அப்பா.." - என் மனதிற்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது.

சில நினைவுகள்
பல உறவுகளை
நினைவு படுத்தும்.
ஆனால், எனக்கு

உறவுகளே உன்
நினைவுகள் தான்.

என்னையும் அறியாமல் என் கண்கள் அழ ஆரம்பித்து இருந்தன எப்பொழுதும் போல....

8 comments:

sulthanonline said...

arumaiyaana pathivu sir,//"நமக்குன்னு ஒரு வீடு. குழந்தைங்க. அத்தை மாமா அம்மா அப்பா.." - என் மனதிற்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது.என்னையும் அறியாமல் என் கண்கள் அழ ஆரம்பித்து இருந்தன எப்பொழுதும் போல....//

எதிர்கால கனவுகளை நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் காதலர்களைப் பற்றி அருமையா சொல்லியிருக்கீங்க.

Priya said...

'கண்ணுக்குத் தெரியாம வரம் தந்துட்டு இருக்கிற சாமிக்கு நாலு முழம் வாங்கும் போது என் கண்ணு முன்னால நின்னுட்டு வரம் தந்திட்டு இருக்கிற தேவதைக்கு ஆறு முழம் வாங்கக் கூடாதா?'

அழகான வரிகள்...
கதை ரொம்ப சூப்பர் போ..

made to imagine the characters and the story..
Characters names superb...:)
Second part made to feel d pain and the lines which is in the d first part made to feel the happiness of each and every moment of life...

Keep writing... looking forward... :)

Unknown said...

///சில நினைவுகள்
பல உறவுகளை
நினைவு படுத்தும்.
ஆனால், எனக்கு
உறவுகளே உன்
நினைவுகள் தான்.///

சூப்பர் அண்ணா... கதையை கவிதையோட ரொம்ப அழகா முடிச்சிருக்கீங்க...

ரேவா said...

நேற்றே உன் கதையை படித்தேன் நண்பா...நேரமின்மையால் பின்னூட்டம் இட முடியவில்லை....கதை வரிகள் ஒவ்வொன்றும் கதையோடு என்னையும் பயணப் படவைத்தது(வழக்கம் போல)...இறுதியில் விட்டுப் போன இதயத்திற்க்காய், அவள் நினைவில் வாழும் இதயத்தின் சோகத்தை உணரமுடிகிறது நண்பா....கவிதையும் அருமை...உன் நினைவுகள் தான் எனது உறவுகள் என்ற இந்த வார்த்தையிலே, காதல் எத்துனை வேகமாய் ஒருவர் உள் சென்று, அவர்கள் உணர்வு தொடுகிறது என்று புரிந்தேன்...சின்ன வேண்டுகோள், எனக்காக ஒரு நகைச்சுவை தொகுப்பு போட முடியுமா?..... உன் எழுத்தில் காண ஆசைப்படுகிறேன்....D70 நினைவோடு பயணிக்கும், பயணியின் நினைவுகள் சொல்லும் கதை...எனக்கும் நான் இருந்த அந்த சென்னைகாலத்தை நினைவு படுத்தியது....நன்றி நண்பா...

எவனோ ஒருவன் said...

@ sulthanonline

மிக்க நன்றி நண்பரே தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்....

எவனோ ஒருவன் said...

@ Priya

keep writing ah!!

அடுத்து என்ன எழுதன்னே தெரியல. சரக்கு தீர்ந்திடுச்சுன்னு நினைக்றேன் :-)

எவனோ ஒருவன் said...

@ ஜெ.ஜெ

ரொம்ப நன்றி தங்கச்சி :-)

எவனோ ஒருவன் said...

@ ரேவா

தங்களின் விரிவான கருத்திற்கு மிக்க நன்றி தோழி. தங்கள் பதிவுகள் தான் அருமை என்றால் தங்கள் கருத்துக்களும் ஆழமாக இருக்கிறது.

////சின்ன வேண்டுகோள், எனக்காக ஒரு நகைச்சுவை தொகுப்பு போட முடியுமா?..... உன் எழுத்தில் காண ஆசைப்படுகிறேன்////

நகைச்சுவைத் தொகுப்பா!!! என்னால எழுத முடியுமான்னு தெரியலை ரேவா. நகைச்சுவைத் தொகுப்பு என்ன மாதிரி இருக்கும்னு கூட எனக்கு தெரியலை. எழுத முயற்சிக்கிறேன். என் எழுத்தில் நகைச்சுவை இல்லாமல் போய்விடின் மன்னித்து விடுங்கள் தங்கள் வேண்டுகோளை நிறைவேற்ற முடியாமல் போனதற்கு....

Post a Comment