Pages

Friday, November 29, 2013

கனவுகளைக் காதலிக்கிறேன் - 9

நிலா அவள் பாட்டி வீட்டிற்கு சென்று விட்டாள். எப்பவும் வரும் விடுமுறை தான் ஆனால் அவளை இந்த முறை மிகவும் மிஸ் பண்ணினேன். அவளிடம் பேச வேண்டும் போல இருந்தது.. அவள் பாட்டி வீட்டு நம்பர் தெரியாது. அவள் வீட்டிற்கு போன் செய்து அவள் அம்மாவிடம் நம்பர் வாங்கி விடலாமா என்று தோன்றியது. ஆனால், அவள் பாட்டி வீட்டில் போன் இருக்காது என்று நினைக்கிறேன். இருந்திருந்தால் கண்டிப்பாக கொடுத்து விட்டு தான் சென்று இருப்பாள். பகல் பொழுது முழுவதையும் கிரிக்கெட் ஆடியே கழித்தேன். மாலை டிவி பார்க்கலாம் என்றால் அம்மா சீரியலாக பார்த்து என்னையும் சீரியல் பைத்தியம் ஆக்கிவிடுவார் என கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடினேன். இப்படியே நாட்கள் சென்றது.

ஒரு வியாழக்கிழமை கிரிக்கெட் விளையாடி விட்டு வீட்டிற்கு வந்தேன். வந்ததும் வராததுமாய் அம்மா 'எங்கடா போய் இருந்த? நிலா கால் பண்ணிருந்தா' என்றார். "அடுத்து எப்பம்மா கால் பண்றேன்னு சொன்னா?" என்று கேட்க 'அதை பத்திலாம் ஏதும் சொல்லல டா அவ பாட்டி வீட்டுல இருக்கா போல வெளிய வந்தாளாம் அதான் கால் பண்ணாளாம்.. ரிசல்ட் எப்ப வருதுன்னு கேட்டாள்' என்றார். ஹ்ம் சரி மா என்று பதில் அளித்துவிட்டு என் அறைக்குச் சென்றேன். ச்ச மிஸ் செய்து விட்டோமே என்று மிக வருத்தமாக இருந்தது.

மறுநாள், நண்பர்கள் வந்து என்னை விளையாட அழைக்க “எனக்கு தலை வலி அதனால நான் வரலை” என்றேன். அதற்கு சந்தோஷ ‘டேய் போன வாரம் கால்ல அடிபட்டு ஓட முடியாத நிலைமைல இருந்த… அப்பவே விளையாட வந்த.. இப்ப என்னாச்சு? சாதாரண தலை வலிக்கு வரலன்னு சொல்ற’ என்றான். ‘நான் விளையாடப் போறேன்னு தான் சொன்னேன்டா அம்மா தான் தலை வலி அதனால இன்னைக்கு ஒரு நாள் வெயில்ல விளையாடப் போகாம வீட்ல இருன்னு சொல்லிட்டாங்க’ என்றேன். ‘நான் வேணா அம்மாகிட்ட பேசிப் பார்க்கிறேன் டா’ என்று ராஜா உள்ளே நுழைய முயற்சிக்க “அம்மா கோவிலுக்குப் போய் இருக்காங்க. அவங்க வந்ததும் நான் கேட்டு வர முயற்சி பண்றேன் டா” என்றேன். ‘சீக்கிரம் வந்து சேரு’ என்று சொலிவிட்டு எல்லாரும் கிளம்பிச் சென்றனர்.

நான் என் அறைக்குப் போய் கம்ப்யூட்டர் கேம்ஸ் விளயாட ஆரம்பித்தேன். அம்மா சமையல் வேலையை முடித்து விட்டு என் அறையை சுத்தம் செய்ய வந்தார். என்னைப் பார்த்ததும் ‘என்ன அதிசயமா இருக்கு! விளையாடப் போகாம இருக்க?’ என்றார்.  ஏதாச்சும் உளறினால் மாட்டிப்பேன் என்று “நான் விளையாடக் கூப்பிட்டேன் மா பசங்களை. ரொம்ப வெயில் அடிக்குதாம் இன்னைக்கு ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு லீவுன்னு சொல்லிட்டாங்க.. என்ன பசங்களோ இந்த வெயிலைக் கூட தாங்கிக்க முடியல.அடுத்து என்னைக் கூப்பிடும் போது நான் வரலன்னு சொல்லிடப் போறேன்.. ஆனால் என்னால தான் விளையாடாமல் இருக்க முடியாது நான் அவங்க கூப்பிட்ட உடனே போயிடுறேன்” என்றேன். ‘ஒரு நாள் தான. நான் ஏற்கனவே உன்னை தினமும் போகாதன்னு திட்டிட்டு இருக்கேன். என்னால 5 நிமிஷம் கூட வெயில்ல நடந்து போக முடில. ஆனால் நீ ஏதோ நிலாக் குளியல் எடுக்கிற மாதிரி அந்த வெயில்ல ஆடிட்டு வர்ற! பாரு வெயில்ல விளையாடி எப்படி கறுத்துப் போய்ட்டன்னு. இன்னைக்கு ரெஸ்ட் எடுக்கலாம்னு சொன்ன பசங்கள கூட்டிட்டு வா அவங்களை பாராட்டனும்’ என்றார். “போங்கம்மா நானே இன்னைக்கு விளையாட முடியலயேன்னு பீலிங்க்ஸ்ல இருக்கேன்’ என்று முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டேன்.

நான் ஏன் விளையாடப் போகாமல் இருக்கிறேன் என்று இனி நான் சொல்லத் தேவை இல்லை. உங்களுக்கே புரிந்திருக்கும் இப்பொழுது. கேம்ஸ் ஆடிக் கொண்டிருந்தேன் மனமே இல்லாமல். சிறிது நேரத்தில் போன் மணி அடிக்க பதறி அடித்துக் கொண்டு ஓடினேன். அம்மாவும் கிச்சனில் இருந்து வர “இவ்வளோ நேரமா ரிங் அடிக்குது என்ன மா பண்ற எடுக்காம” என்றேன். ‘என்ன டா சொல்ற.. இப்ப தான் போன் வந்த மாதிரி இருக்கு. ஒரு ரிங் கூட முடியலையே’ என்றார். “இல்லம்மா நிறைய ரிங் வந்துச்சு உனக்கு கேட்கல போல கிச்சன்ல பிசியா இருந்திருப்பீங்க” என்றேன். ‘இல்லையே போன் சத்தம் எப்பவும் எனக்கு கேட்குமே’ என்றார். “அம்மா எங்கிட்ட பேசினது போதும் முதல்ல போன்ல யாருன்னு பாருங்க” என்றேன். ‘பாரு உன்னோட பேசிட்டே நான் அதை மறந்துட்டேன்’ என்று சொல்லிவிட்டு போனை எடுத்து பேச ஆரம்பித்தார். அம்மா பேசுவதில் இருந்து அவர் அத்தையுடன் பேசுகிறார் என்று தெரிந்தது. நான் போய் டிவி பார்க்க ஆரம்பித்தேன். பேசி முடித்துவிட்டு அம்மா என்னிடம் வந்து ‘டேய் டிவி தான பார்த்துட்டு இருக்க அடுத்து போன் ஏதாச்சும் வந்தா அட்டென்ட் பண்ணு. கிச்சன்ல இருக்கிறதுனால கேட்காம போயிடப் போகுது எனக்கு’ என்றார். அதுக்கு தான இங்க உட்கார்ந்திட்டு இருக்கேன் என்று மனதில் நினைத்தவன் “சரி மா” என்றேன்.

அரை மணி நேரம் கழித்து மீண்டும் போன் ஒலித்தது. மீண்டும் வேகமாக ஓடிச் சென்று போனை எடுத்தேன் நல்ல வேலை அம்மா பார்க்கவில்லை. “ஹலோ” என்றேன். ‘சார் இது பாலாஜி எலெக்ட்ரிகல்ஸா’ என்று குரல் எதிர்முனையில் இருந்து.”ராங் நம்பர்” கடுப்பில் போனை வைத்தேன். டிவி போர் அடிக்கவே ‘five point someone’ கதை புக்கை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். பாதி புக் படித்து முடிக்கும் போது மீண்டும் போன் வந்தது. இந்த முறையும் வேறு யாராச்சும் இருக்கும் என்று எந்த அவசரமும் இல்லாமல் பொறுமையாகப் போனேன். ‘போனை எடுக்காம என்னடா பண்ற?’ என்று அம்மாவின் குரல் கேட்டது. அட்டென்ட் பண்ணிட்டேன் மா என்று பதிலளித்துவிட்டு “ஹலோ” என்றேன்.

‘போனை எடுக்க இவ்வளோ நேரமா டா?’ என்று ஒரு பெண் குரல்.

“ஹே நிலா.. எப்படி இருக்க?”

‘நான் கேட்டதுக்கு பதில் சொல்லு. ஏன் இவ்வளோ நேரம்? சார் அவ்வளோ பிசியா?’

“இல்ல.. ரூம்ல புக் படிச்சிட்டு இருந்தேன் அதான்”

‘என்னை விட புக் தான் உனக்கு முக்கியமா?’

“உன்னோட கால்னு எனக்கு தெரியாதுல்ல”

‘நான் இன்னைக்கு கால் பண்ணுவேன்னு உனக்கு தெரியாது?’

“தெரியும் நீ கண்டிப்பா பண்ணுவன்னு”

‘எப்படி?’

“நான் எப்படி இன்னைக்கு விளையாடப் போக மாட்டேன்னு தெரியும் உனக்கு? வீட்டுல தான் கண்டிப்பா இருப்பேன்னு கால் பண்ணல்ல அப்படி தான்” என்றேன்.

சிரித்தாள்.

‘ஆமா ஏன் இன்னைக்கு நீ விளையாடப் போல?’

“ஒரு லூசு கால் பண்ணும்னு தான். இப்ப தான் என் ஞாபகம் வந்துச்சா?”

‘இல்ல டா. பாட்டி வீட்ல போன் இல்ல. பக்கத்து ஊருக்கு நேத்து வந்தோம். அதான் உனக்கு போன் பண்ணேன். ஆனால் அம்மா எடுத்தாங்க என்ன சொல்லன்னு தெரியலை அதான் 10த் ரிசல்ட் பத்தி கேட்க போன் பண்ணேன்னு சொன்னேன். இன்னைக்கு உன் மேல நம்பிக்கை நீ என் போனுக்காக காத்திட்டு இருப்பன்னு. பாட்டிட்ட ரிசல்ட் எப்ப வரும்னு ஸ்கூலுக்கு போன் பண்ணி கேட்கனும்னு சொல்லிட்டு இன்னைக்கு வந்திருக்கேன் டா’

“என்னை ரொம்ப மிஸ் பண்ணியா?”

‘என்னோட க்ளோஸ் ப்ரெண்ட் நீ உன்னை மிஸ் பண்ணாம இருப்பேனா? எப்ப ரிசல்ட் வரும்னு இருக்கு டா. உன்னை பார்க்கணும்’

“ரிசல்ட் மே 18 வர்றதா சொல்றாங்க. அதனால நீ 15 கிட்ட வந்திடு”

‘சரி டா பாட்டி வந்துட்டாங்க. நான் வைக்கிறேன் ஊருக்கு வந்துட்டு பேசுறேன்’ என்று சொல்லிவிட்டு கட் செய்தாள்.

நிலாவின் குரல் கேட்டது எனக்கு ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியை தந்தது.

மே 18 – பதம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தது.

நானும் நிலாவும் ரிசல்ட் பார்க்கச் சென்றோம். நிலா எதிர்பார்த்தது போல நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தாள். 1100க்கு 1047. ஆனால் அன்று எதிர்பாராத ஒன்றும் நடந்தது நான் 1002 எடுத்திருந்தேன். என்னை விட மிகவும் சந்தோசப்ட்டவள் நிலா தான்.

பின் ஸ்கூலுக்குச் சென்றோம். நிலா மெட்ரிக் தேர்வில் எங்கள் மாவட்டத்தில் முதலாவதாக வந்திருந்தாள். அளவில்லா மகிழ்ச்சி எனக்கு. அவளுக்கு வாழ்த்துக்‌களாக குவிந்தது. அனைத்து ஆசிரியர்கள் நண்பர்களின் பாராட்டு மழையில் நனைத்து கொண்டிருந்தாள். எல்லாவற்றையும் நான் சந்தோஷமாக பார்த்துக் கொண்டிருந்தேன்.

என்னிடம் வந்து தலைமை ஆசிரியர் வாழ்த்துக்களைக் கூறினார். எதுக்கு சார் என்று நான் கேட்க நீ தான்பா ஸ்கூல் செகன்ட் என்றார். “சார் என்னால நம்ப முடியல” என்றேன். ‘எங்களாலையும் தான்பா’ என்றார் சிரித்தவாறே. ‘12 ல இதை விட நல்லா ஸ்கோர் பண்ணனும். நிலா உனக்கு ஒரு போட்டி வந்தாச்சு. ரொம்ப நல்லா படிக்கணும் இனிமேல’ என்று எங்கள் இருவரையும் வாழ்த்தி விட்டுச் சென்றார்.

நிலா ‘டேய் சூப்பர் டா. இன்னும் கொஞ்சம் நல்லா படிச்சிருந்தா நீ ஃபர்ஸ்ட் வந்திருக்கலாம். 12 ல நீ ஃபர்ஸ்ட்டா வரனும்’ என்றாள்.

“முதல் இடம் எப்பவும் உனக்கு தான் சொந்தம். அதை யாரும் அசைக்க முடியாது. எனக்கு நல்ல ஸ்கோர் எடுத்தாப் போதும்” என்றேன்.

‘நீ நல்லா படிச்சு முதலா வருவன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு’ என்றாள் நிலா.

பதினொன்றாம் வகுப்பு அட்மிசன் இரண்டு நாட்களில் நடந்தது. நான் நிலா வித்யா அஷோக் கார்த்திக் அனைவரும் முதல் க்ரூப் எடுத்தோம்.

நிலாவிடம் தமிழ் சாரிடம் ஃபர்ஸ்ட் க்ரூப் எடுத்ததை சொல்லிவிட்டு வா என்றேன். அவளும் சரி என்று சொல்லிவிட்டு வந்தாள். நானும் சென்று “சார் நானும் முதல் க்ரூப் எடுத்திருக்கேன்” என்று சொல்ல ‘வாழ்த்துக்கள்’ என்றார். “சார் முதல் க்ரூப்லயும் ரெண்டு செக்சன் இருக்குமா?” என்று நான் கேட்க அவர் கோபத்தில் ‘தெரியாது. எனக்கு ஸ்பெசல் க்ளாஸ்க்கு நேரம் ஆச்சு’ சொல்லிவிட்டு நகர்ந்தார்.

‘ஏன்டா அவர்ட்ட போய் வம்பிழுத்திட்டு வர்ற?’ என்றாள் நிலா.

“அப்புறம் என்ன நம்மள போன வருஷம் பிரிச்சாருல்ல. இனி என்ன பண்றாருன்னு பார்க்கிறேன்” என்றேன்.

‘அனால் நீயே ஐடியா கொடுத்திட்டு வர்ற ரெண்டு செக்சனுக்கு’

“அய்யோ இருக்கிறது 25 பேரு. ஒன்னுக்கே வழியைக் காணோம் இதுல எங்க ரெண்டு பிரிக்கப் போறாங்க’ சிரித்தேன்.

‘எனக்கு பயமா இருக்கு டா. அவர் நமக்கு க்ளாஸ் எடுக்க வந்தா ஏதாச்சும் பிரச்சனை பண்ணுவாரு உங்கிட்ட’

“பயப்படாத நமக்கு தமிழுக்கு லக்ஷ்மி மேடம் தான் வர்றாங்க” என்றேன்.

‘ஹ்ம்ம்’ என்றாள். அவள் கண்களில் இருந்த பயம் போகவில்லை.

11ம் வகுப்பு முதல் நாள்,
தமிழ் சார் உள்ளே நுழைந்தார். என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டே ‘XIth முதல் க்ரூப்புக்கு நான் தான் க்ளாஸ் டீச்சர். என்னால உங்களை விட்டுப் பிரிய முடியல. அதான் நானே கேட்டு வாங்கி இந்த செக்சனுக்கு க்ளாஸ் டீச்சர் ஆயிருக்கேன்’ என்றார்.

நிலா கண்களில் ஒரு பயம் தெரிந்தது என்னை ஏதும் செய்து விடுவார் என்று.


உறங்கச் செல்கிறேன்….

0 comments:

Post a Comment