Pages

Monday, October 28, 2013

கனவுகளைக் காதலிக்கிறேன் - 6

“வித்யா நீ போய் சாப்பிடு” என்றேன்.

‘நீ எங்க டா போற?’ என்றாள் வித்யா.

“எனக்கு இங்க சாப்பிட பிடிக்கல அதனால வீட்டுக்குப் போறேன்”

‘அதான் இன்னைக்கு அவளே சாப்பிட கூப்பிட்டாள்ல அவளோட போய் இருக்க வேண்டி தான?’

“நான் வருவேன்னு தெரிஞ்சும் நேத்து ஏன் அவ என்ன விட்டுட்டுப் போனா. அதை நினைச்சாலே ஏதோ ஒரு கோபம் வருது அவ மேல. என் நட்புக்கு இவ்வளவு தான் மதிப்பா???? இதெல்லாம் உனக்குப் புரியாது.. விடு வித்யா”

‘கோபத்தை குறைச்சுக்கோடா. நீ கோபப்படுறதா இருந்தா முதல்ல எங்கிட்ட தான் கோபப்படனும். நேத்து நிலா லேப் வெளிய தான் உனக்காக காத்துக்கிட்டு இருந்தா. நீ அப்ப தான் உள்ள போய் இருந்த அதனால நான் தான் நீ வர லேட் ஆகும்னு அவளை போகச் சொன்னேன்’

“நீ சொன்னா அவ போயிடுவாளா????”

‘எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு நான் தான் உங்க சண்டைக்கு காரணம்னு. நான் வேணா அவகிட்ட பேசிப் பார்க்கிறேன் டா’

“ஒன்னும் வேணாம். எங்களை சேர்த்து வைக்கிறேன்னு நீ ஏதும் பண்ண நான் உன்கிட்டயும் பேச மாட்டேன்.. அப்புறம் உன் இஷ்டம்” சொல்லிவிட்டு கிளம்பத் தயாரான நேரத்தில் நிலாவும் வந்தால் சைக்கிள் ஸ்டாண்டிற்கு.

அவளும் தன் சைக்கிளை எடுத்தாள். என்னைப் புரிந்து கொண்டவளாய் வித்யா நான் கேட்க நினைத்ததை நிலாவிடம் கேட்டாள் எங்க டி போற என்று. நிலா ‘வீட்டுக்குப் போய் சாப்பிடப் போறேன்’ பதில் சொல்லிவிட்டு புறப்பட்டுச் சென்றாள்.

வித்யா நான் என்ன சொல்ல போகிறேன் என்று என்னையே பார்த்தாள். நான் பதில் எதும் சொல்லாமல் தலை குனிந்து நின்றேன்.

‘எப்படி இப்படி ஒரு ஃப்ரெண்ட்ட உன்னால பேசாம இருக்க முடியுது???? நேத்து கூட என்ன நடந்துச்சு என்று தெரியாம நீ தான் அவசரப்படுறியோன்னு தோனுது. அவள்ட்ட பேசு என்றாள்’ வித்யா.

அவள் சொல்வது எனக்கு புரிந்தாலும் என் ஈகோ என்னைத் தடுத்தது நிலாவிடம் பேச.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வேறு நெருங்கிக் கொண்டிருந்தது. எங்கள் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் எந்த க்ரூப் வேண்டும் என்று பொதுத் தேர்வுக்கு முன்னரே பதிவு செய்து கொள்ள வேண்டும். பத்தாம் வகுப்புத் தேர்வில் அந்த குரூப்பிற்கு தேவையான மதிப்பெண்கள் எடுத்தால் நாம் கேட்ட க்ரூப் கிடைத்துவிடும்.

அன்று க்ரூப் பதிவு செய்யும் நாள்,

நாங்கள் எல்லாரும் வரிசையில் நின்று கொண்டிருந்தோம். எனக்கு முன்னால் வித்யா நின்று கொண்டிருந்தாள். அந்நேரம் நிலா வர அவளை தனக்குப் பின்னால் நிறுத்தினாள் நாங்கள் ஏதும் பேசிக் கொள்வோம் என்று. நானும் நிலா என்னிடம் க்ரூப் பற்றி ஏதும் கேட்பாள் அப்படியே அவளிடம் பேசிவிடலாம் என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவள் வித்யாவிடம் மட்டும் பேசிக் கொண்டிருந்தாள். என்னை கண்டு கொள்ள கூட இல்லை. நானும் அவளிடம் ஏதும் கேட்கவில்லை. வித்யாவின் முறை வர அவள் முதல் க்ரூப் என்றாள். நிலா பதிவு செய்யும் முறை, அவள் என்னை திரும்பி ஒரு முறை பார்த்தாள். ஆனால், ஏதும் பேசவில்லை. அவளும் முதல் குரூப்பை பதிவு செய்து விட்டு வித்யா விடம் பேச ஆரம்பித்தாள் மீண்டும்.

இப்போது என்னுடைய முறை. பேசுவதை விட நான் என்ன க்ரூப் எடுக்கப் போகிறேன் என்பதிலேயே நிலாவின் கவனம் முழுதும் இருந்தது. கம்ப்யூட்டர் க்ரூப் வேணும் என்றேன். இதைக் கேட்டதும் நிலா ஏதும் பேசாமல் அவள் க்ளாஸிற்கு சென்று விட்டாள் வித்யாவிடம் கூட சொல்லாமல். வித்யா என்னை அசிங்கமாக திட்டாத குறை தான். அவளுக்கு தெரிந்த 'நாயே பேயே சனியனே' போன்ற வார்த்தைகளால் என்னை வறுத்து எடுத்தாள். ‘அவளை ரொம்ப கஷ்டப்படுத்துற நீ. எங்கிட்டயும் பேசாத போ டா’ என்று சொல்லிவிட்டு வித்யாவும் சென்று விட்டாள்.

அவர்கள் இருவரும் சென்றதும் பதிவு செய்து கொண்டு இருப்பவரிடம் ‘சார் நான் என்ன க்ரூப் சொன்னேன்?’ என்றேன். IInd க்ரூப் தம்பி என்றார். எனக்கு முதல் க்ரூப் தான் வேணும் என்றேன். தம்பி இனி மாத்த முடியாது என்று அவர் சொல்ல அவர் காலில் விழாத குறையாக எப்படியோ எனக்கு முதல் க்ரூப் என்று மாற்ற வைத்தேன்.

நாளை முதல் Study Holidays ஆரம்பிக்கப் போகிறது. நிலாவை அடுத்து பரீட்சை அன்று தான் பார்க்க முடியும். இன்று கிளம்புவதற்கு முன் அவளிடம் எப்படியாவது பேசிவிட வேண்டும் என்று முடிவெடுத்தேன். எங்கள் க்ளாஸ் சீக்கிரமே முடிந்ததால் நான் அவள் க்ளாஸ் முன் நின்று கொண்டிருந்தேன். அவளுக்காக காத்திருக்கிறது தெரிந்து விடக் கூடாது என்று அஷோக்கிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவள் க்ளாஸ் முடிந்தது. பேக் எடுத்துக் கொண்டு கிளம்பத் தயாரானாள்.

என்னை பார்த்தவள் உன்கிட்ட கொஞ்சம் தனிய பேசனும், வீட்டுக்கு போயிட்டே பேசலாமா என்றாள். நான் சரி என்று சொல்ல இருவரும் சைக்கிளை உருட்டிக் கொண்டே பேச ஆரம்பித்தோம்.

‘அன்னைக்கு ஏன் வேற க்ரூப் எடுத்த?’

“ஏதோ ஒரு கோபத்துல”

‘அப்புறம் எதுக்கு திரும்ப முதல் க்ரூப்னு மாத்துன?’

“உனக்கு எப்படி தெரியும்?”

‘உளவுத்துறைல இருந்து செய்தி வந்துச்சு. அப்படி என்னடா கோபம் என் மேல. நான் அப்படி என்ன தப்பு பண்ணேன்? அன்னைக்கு என்ன நடந்துச்சு தெரியுமா’

“அதைப் பத்தி பேசாத. நினைச்சா இன்னும் கோபம் வருது”

‘நீ இப்படி தான் சொல்லுவன்னு தெரியும் அதான் என் மனசுல இருக்கிறத இந்த லெட்டர்ல எழுதி இருக்கேன். வீட்டுல போய் படி. படிச்சப்புறம் என்னை நீ புரிஞ்சுப்பன்னு நினைக்கிறேன்’

“ஹ்ம்ம்”

‘நீ எங்கிட்ட பேசலைன்னா கண்டிப்பா என்னால பரீட்சை நல்லா எழுத முடியாது. அப்புறம் யார் நினைத்தாலும் ரெண்டு பேரும் ஒரே க்ரூப்ல படிக்க மாட்டோம். என் ஸ்கோர் குறைந்தால் கடைசி க்ரூப் தான் கிடைக்கும். நான் கஷ்டப்பட்டு படிக்கிறதை விட நீ பரீட்சை முன்னால சொல்ற ஆல் தி பெஸ்ட்ல என்னோட மார்க்ஸ் இருக்கு’

“நீ கண்டிப்பா நல்லா பண்ணுவ நான் ஆல் தி பெஸ்ட் சொல்லலைன்னாலும்”

‘ஏன்டா இப்படி என்னோட சண்டை போடுற. நான் என்ன சொன்னாலும் நீ இப்படி தான் இடும்புக்கு பேசுவ. அந்த லெட்டரை படி அதுக்கப்புறம் நீயே முடிவு பண்ணிக்கோ நம்ம நட்பு தொடரனுமா இல்லை வேண்டாமா என்று. பரீட்சை அன்னைக்கு உன்னை சந்திப்பேங்கிற நம்பிக்கைல இப்போ கிளம்புறேன்’ என்றாள்.

“என்ன இருக்கு அந்த லெட்டர்ல?”

‘உங்கிட்ட பல முறை என்ன நடந்துச்சுன்னு சொல்ல வந்தேன். நீ என்னை பேசவே விடலை. அதான் இப்ப லெட்டரா எழுதிட்டேன் நீயே படிச்சு தெரிஞ்சுக்கோ. பார்க்கலாம் ஆங்கிலப் பரீட்சை அன்னைக்கு உனக்கு என்னைப் பார்க்கனும் என்று இருந்தால்’

விடை பெற்றோம் இருவரும்.

வீட்டிற்கு வந்ததும் நிலா கொடுத்த லெட்டரைப் பிரித்து படிக்க ஆரம்பித்தேன்.


உறங்கச் செல்கிறேன்….

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஈகோ ஆரம்பித்து விட்டதா...?

Unknown said...

சூப்பர்... லெட்டர்ல என்ன இருக்குனு நாளைக்கு போஸ்ட் பண்ணுங்க...

Post a Comment